'ஆறில் நான்கு வேண்டும்' அடம்பிடிக்கும் பா.ஜ.க டு புறக்கணிக்கும் வேல்முருகன்! | கழுகார் அப்டேட்ஸ்

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், கன்னியாகுமரி மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட்டது. மீதமிருக்கும் தொகுதிகளில் மூன்றில் பா.ஜ.க-வும், ஒரு தொகுதியில் த.மா.க-வும் போட்டியிட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்தியிருப்பதால், நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு தொகுதிகளைக் கேட்டு அடம்பிடிக்கிறார்களாம் குமரி மாவட்ட பா.ஜ.க-வினர். ‘கன்னியாகுமரியை மட்டும் அ.தி.மு.க-வுக்கும், மீதமுள்ள கிள்ளியூர் தொகுதியை த.மா.க-வுக்கும் ஒதுக்க வேண்டும்’ என்று இப்போதிருந்தே நெருக்குகிறார்களாம்.

‘தொகுதிப் பங்கீடு சமயத்தில் பேசிக்கொள்ளலாம்’ என்று அ.தி.மு.க தரப்பு சொன்னாலும், தொகுதிகளில் இப்போதே வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள் பா.ஜ.க-வினர். இதனால் குமரி அ.தி.மு.க-வினர் கொதிப்பில் இருக்கிறார்கள்.

தலைநகரில் செயல்படும் பழமையான கூட்டுறவு நிறுவனம் ஒன்றில், உயர் பொறுப்பில் இருக்கிறார் அந்த பெண் அதிகாரி. அந்த கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பொருட்கள், விற்கப்படும் பொருட்கள் என அனைத்துக்கும் பத்து முதல் இருபது சதவிகிதம் வரையில் இனிப்புகளை வாங்கிச் சுருட்டுகிறாராம்.

சமீபத்தில், அவருக்கு இனிப்பு தர மறுத்து போர்க்கொடி தூக்கியிருக்கிறது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்துக்கு கடும் குடைச்சலை அந்த பெண் அதிகாரி கொடுக்கவே, விவகாரம் துறையின் மேலிடம் வரையில் புகாராகியிருக்கிறது. அவர்கள் விசாரித்ததில், ‘ஏற்கெனவே அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

பழைய இடத்தில் வேலை பார்த்தபோது பல பஞ்சாயத்துகளில் சிக்கியதால்தான், இங்கே தூக்கியடிக்கப்பட்டார்’ என்று விவரங்கள் வெளிவந்ததாம். கடுப்பான துறை மேலிடம், அந்த பெண் அதிகாரிக்கு துறைக்குள் உதவுபவர்கள் யார், கலெக்ஷன் ஏஜெண்டுகள் யார் என்ற விவரங்களை எடுக்க உத்தரவிட்டுள்ளதாம்.

புதுச்சேரியில், லட்சிய ஜனநாயகக் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தார், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். ஆரம்பம் முதலே இவர், முதல்வர் ரங்கசாமியைக் கடுமையாக விமர்சித்து வந்தார். டெல்லிக்கு அவரை அழைத்த பா.ஜ.க தலைமை, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துகொண்டு, கொடுக்கும் சீட்டில் நிற்க வேண்டும்’ என்று சொல்லி அனுப்பியது.

லாட்டரி மார்ட்டின் மகன் சார்லஸ்

டெல்லியிலிருந்து புதுச்சேரி வந்த வேகத்தில், முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசி வாங்கினார் சார்லஸ் மார்ட்டின். அன்றோடு அமைதியானவர் அதன்பிறகு ரங்கசாமிக்கு எதிராக ஒரு முணுமுணுப்புகூட செய்வதில்லை. இதனால், ல.ஜ.க கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், கட்சியின் வாட்ஸ்அப் குழுவில் நாள்தோறும் சார்லஸை விமர்சிக்கிறார்களாம். ‘இவரை நம்பி வந்ததற்கு பா.ஜ.க-வோடு நம்மைக் கொண்டுபோய் நிறுத்திவிடுவார் போலயே…’ என்று ஒவ்வொரு நிர்வாகியாகக் கட்சியை விட்டு வெளியேற ஆரம்பித்திருக்கிறார்களாம். ‘எல்லோரும் வெளியே போனால் என்ன செய்வது’ என்று கவலையில் புலம்புகிறாராம் சார்லஸ் மார்ட்டின்.

கடந்த எட்டு வருடமாக தி.மு.க கூட்டணியில் இருக்கும் வேல்முருகன், வரும் தேர்தலிலும் அறிவாலயத்துடன் கூட்டணி தொடரும் என்று பேசிவந்தார். சீட் பங்கீடு தொடர்பாக சீனியர் அமைச்சர் ஒருவர் வேல்முருகன் தரப்பிடம் பேசியபோது, ‘நெய்வேலி, கடலூர் தொகுதிகள் வேண்டும். தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்’ என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அந்த சீனியர் அமைச்சர் எதுவுமே பதில் சொல்லவில்லையாம்.

வேல்முருகன்

அதில் அப்செட்டான வேல்முருகன், சென்னையில் முதல்வர் பங்கேற்ற கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அந்நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை. அதேபோல, வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியையும் புறக்கணித்திருக்கிறார். இதற்கிடையே, ‘கூடுதல் தொகுதி ஒதுக்கவில்லை என்றால் கூட்டணியிலிருந்து த.வா.க வெளியேறும்’ என்று நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், அதிரிபுதிரியாகி இருக்கிறது கூட்டணி.

Loading…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *