"ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல" – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

Spread the love

“பல்கலை பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை தவிர்க்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

சில மாதங்களுக்கு முன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் பட்டத்தைப் பெறாமல் துணைவேந்தர் மூலம் பட்டம் பெற்றார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீன் ராஜன் என்ற ஆராய்ச்சி மாணவி. இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா கடந்த 13.08.2025 அன்று நடந்தது. அந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கவிருந்த பட்டத்தை ஜீன் ராஜன் என்பவர் பெற மறுத்து, துணைவேந்தர் மூலம் பெற்றுக் கொண்டார். பல்கலைக்கழக சட்டப்படி, வேந்தரே பல்கலைக்கழகத் தலைவர், துணைவேந்தர், வேந்தர் இல்லாதபோது மட்டுமே பட்டத்தை வழங்க முடியும். எனவே வேந்தரிடம் பட்டம் பெற மறுத்தது சட்டமீறல்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

அதுமட்டுமன்றி, ‘தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யாத ஆளுநரிடம் நான் ஏன் பட்டம் வாங்க வேண்டும்’ என அந்த மாணவி கூறி இருக்கிறார். துணைவேந்தரிடம் இருந்து பெற்ற பட்டம் செல்லத்தக்கது அல்ல. எனவே, அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், இந்த வழக்கு முடியும் வரை மாணவியின் பட்டம் செல்லுபடியாகும் தன்மைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதற்காக நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுந்ரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பட்டமளிப்பு விழாவின்போது மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் மாண்பைக் காக்க வேண்டும், இளைய தலைமுறைகளுக்கு உரிய வழிகாட்ட வேண்டும்” என்று தெரிவித்த நீதிபதிகள், “பல்கலைக்கழக விதியில் இது போன்று செயல்பட்டவர்களுக்கு துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா என மனுதாரரும், பல்கலைக்கழக வழக்கறிஞரும் பதில் மனு அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *