ஆளுநர் காரை பைக்கில் பின் தொடர்ந்த இளைஞர்களால் பரபரப்பு:போலீசார் தீவிர விசாரணை  – Kumudam

Spread the love

கடந்த 8-ம் தேதி  இரவு திருவான்மியூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நிகிழ்ச்சி முடித்துவிட்டு கிண்டியில் உள்ள “மக்கள் மாளிகை(ஆளுநர் மாளிகை)”-க்கு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட் அருகே ஆளுநர் கான்வாய் போலீஸ் பாதுகாப்பையும் மீறி இரண்டு இளைஞர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் சீறிப்பாய்ந்துள்ளனர். ஆளுநர் வாகனத்திற்கு முன்னேயும் பின்னேயும் காண்வாய் வாகனங்கள் செல்ல, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் ஆளுநர் காருக்கு இணையாக இரு சக்கர வாகனத்தில் சீறிப்பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால், அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் செய்வதறியாது திகைத்து ஆளுநர் கான்வாயை நிறுத்தவும் முடியாமல் இளைஞர்களை பிடிக்கவும் முடியாமல் திணறினர். பின்பு வாக்கி டாக்கி மூலம் போலீசார் உஷார் படுத்தப்பட்டு இளைஞர்களை மடக்கி பிடிக்க போலீசார் கூறியுள்ளனர். 

ஆனால், எவ்வளவு முயன்றும் போலீசாரால் இருசக்கர வாகனத்தில் ஆளுநர் வாகனத்துக்கு இணையாக சீறிப்பாய்ந்த இளைஞர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.பின்னர் ஆளுநர் கான்வாய் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகை முதல் கேட்  அருகே சென்றபோது இளைஞர்கள் வாகன வேகத்தை குறைத்துள்ளனர். இதனால், அங்கிருந்த போலீசார் உடனடியாக இளைஞர்களை சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

போலீசார் விசாரணையில் இருவரும் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்தது தெரியவந்தது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த அன்புராஜ் (22), விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஜீவா (22) என்பதும் தெரியவந்தது.இருவரும் பெருங்களத்தூர் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

ஞாயிற்றுக் கிழமையான நேற்று அடையாறு பகுதிக்கு வந்து மது குடித்துவிட்டு பின் பெருங்களத்தூர் சென்றுள்ளனர். அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட் அருகே வரும் பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை பார்த்ததும் குடிபோதையில் இருந்த தங்களை பிடித்து அபராதம் விதித்து விடுவார்கள் என நினைத்து ஆளுநர் கான்வாய்க்குள் புகுந்து சுமார் 500 மீட்டர் தூரம் வரை ஆளுநர் கான்வாய்க்கு இணையாக சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த கிண்டி போலீசார் இருவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *