இண்டோர் செடிகள் வளர்ப்பது என்பது பார்வைக்கு அழகாக இருக்கும். புத்துணர்வு தரும். மனதுக்கு நல்ல உணர்வைத் தரும். மற்றபடி, அது அறையின் காற்றைச் சுத்திகரிக்கும் என்றெல்லாம் நிச்சயம் சொல்ல முடியாது.
அதே சமயம், அந்தச் செடிகளை வைப்பதால் கெடுதலும் ஏற்படப் போவதில்லை. ஆனால், இதில் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பூப் பூக்கும்படியான செடிகள் வைப்பதால், அவற்றில் உள்ள மகரந்தம் அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே, அப்படிப்பட்ட செடிகளைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் அலங்காரப் பொருள்கள் வைப்பதுபோல, இண்டோர் செடிகளையும் வைக்கலாம், அவ்வளவுதான்.

வெளியில் இருக்கும்போது பிரச்னையில்லை, அதுவே வீட்டுக்குள் நுழைந்தால் அலர்ஜி ஏற்படுகிறது என்பவர்களுக்கு “ஏர் பியூரிஃபையர்’ (Air Purifier) கருவிகள் உதவும். வீட்டுக்குள் அலர்ஜியை ஏற்படுத்துவதில், டஸ்ட் மைட்ஸ் (Dust Mites) எனப்படும் கண்ணுக்குத் தெரியாத, மிகச்சிறிய நுண்ணுயிரிகளுக்குத்தான் முதலிடம்.
படுக்கை, மெத்தை, தலையணை, சோஃபா போன்றவற்றில்தான் இவை அதிகமிருக்கும். படுக்கை விரிப்பு, தலையணை உறை, சோஃபா உறை போன்றவற்றை வாரம் ஒருமுறை வெந்நீரில் ஊறவைத்துத் துவைத்து, வெயிலில் காய வைக்க வேண்டும்.
தலையணை, மெத்தை போன்றவற்றை வருடக் கணக்கில் உபயோகிப்பவர்கள் பலர். குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றை மாற்றலாம். அது முடியாத பட்சத்தில், குறிப்பிட்ட நாள்களுக்கொரு முறை வெயிலில் வைத்திருந்து, நன்றாகத் தட்டிவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம். இந்த வேலையைக்கூட அலர்ஜி இல்லாதவர்கள் செய்வது சிறந்தது.