இங்கிலாந்து போராட்டம் வீண்! திலக் வர்மா அதிரடியால் இந்தியா அபார வெற்றி!

Dinamani2f2025 01 252f9iff9nzc2fgij4dgbbwaaffyq.jpg
Spread the love

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜனவரி 25) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது. இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர்.

பில் சால்ட் 4 ரன்களிலும், பென் டக்கெட் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். கேப்டன் ஜோஸ் பட்லர் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி அசத்திய போதிலும், மறுமுனையில் விளையாடிய வீரர்களால் அவருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

ஹாரி ப்ரூக் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் இருவரும் தலா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார்.

அறிமுக வீரராக களமிறங்கிய ஜேமி ஸ்மித் அதிரடியாக 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய பிரைடான் கார்ஸ் 17 பந்துகளில் அதிரடியாக 31 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்‌ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிசேக் சர்மா இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

சஞ்சு சாம்சன் 5 ரன்களிலும், அபிசேக் சர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா 12 ரன்களிலும், ஜுரேல் 4, பாண்டியா 7 ரன்களிலும் ஆட்டமிழக்க வாசிங்டன் சுந்தர் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 26 ரன்கள் விளாசினார்.

பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோயுடன் தனியாளாகப் போராடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா கடைசி ஓவரில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அவர் 55 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரியுடன் 72 ரன்கள் விளாசினார். ரவி பிஷ்னோய் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இறுதியில் 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்து இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *