இந்த நிலையில், சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் பேசுகிறார்கள். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் அவைக்கு வரவில்லை. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவைக்கு வருகை தந்து, பதிலுரையை முழுவதுமாக அவையில் இருந்தார்.
அதேநேரத்தில் ராமதாஸ் ஆதரவு பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே. மணி, அருள் ஆகியோர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளநிலையில், அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
இதற்கு முன்பு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான முதல்வரின் பதிலுரையையும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பதிலுரை பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபை வளாகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. மக்கள் பணியில் கவனம் தேவை எனக்குறிப்பிட்டு தி.மு.க. விடியா ஆட்சியின் மதிப்பெண் அட்டையை அவர் வெளியிட்டார்.
