இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் தன் இன்னிசைக் குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல். இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில் தன் பயணம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதில், “எனக்குப் பின்னணிப் பாடகராக இருப்பதை விட மேடையில் பாடுவதே மிகவும் பிடிக்கும். நேரடி மேடை நிகழ்ச்சியில் அதன் இயல்புதன்மை மாறாமல் இருப்பது முக்கியம். அப்போதுதான் அந்தக் கலைஞர் அந்த மேடையில் மையமாகத் திகழ்வார்.

மேடையில் பாடும்போது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடலுக்கு ஏற்ப உதடுகளை மட்டும் அசைக்கும் ‘லிப்-சிங்கிங்’ (lip-syncing) முறையை, நான் ஒருபோதும் சார்ந்திருக்க விரும்பமாட்டேன். அப்படி செய்வது எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை நான் அப்படிச் செய்ய வேண்டிய சூழல் வந்தால், அன்றே நான் பாடுவதை நிறுத்திவிடுவேன். எனது குரல் வளம் எனக்குத் துணையாக இருக்கும் வரை தொடர்ந்து இசைப் பயிற்சியில் ஈடுபட்டு, மேடையில் நின்று பார்வையாளர்களுக்காக நேரடியாகப் பாடுவதையே விரும்புகிறேன்.
அரிஜித் சிங் இசையிலிருந்து ஒரு இடைவேளை எடுத்துக்கொள்ள எடுத்த முடிவு மிகவும் துணிச்சலான முடிவு. எனக்கும் சில சமயங்களில் இசையிலிருந்து ஒரு இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் என்னால் அப்படி முடிவெடுக்க முடியவில்லை. அரிஜித் இசையோடு ஆழமான பிணைப்பைக் கொண்ட நபர். அவர் இதயபூர்வமாக இசையை நேசிக்கும் ஒரு கலைஞர். தான் ஏன் இசையமைக்கிறோம் அல்லது அதன் மூலம் தனக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் அவர் சிந்திப்பதில்லை. அவருக்கு எதைச் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறதோ, அதை மட்டுமே அவர் செய்கிறார். அரிஜித்தின் இசையின் மீதான அந்த நேர்மைதான், பார்வையாளர்கள் அவருடன் இவ்வளவு ஆழமாக ஒன்றிணைந்து உணர்வதற்கு ஒரு முக்கியக் காரணம்.

அவரைப் பொறுத்தவரை, இசைதான் மற்ற எல்லாவற்றையும் விடப் பெரியது. அதனால்தான் மக்கள் அவரை இவ்வளவு அதிகமாக நேசிக்கிறார்கள். பாலிவுட் திரையுலகை அரிஜித் சிங் பல ‘ஹிட்’ பாடல்களால் அலங்கரித்திருக்கிறார். பொழுதுபோக்கு கலைஞர்களாக, நாம் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளும் விஷயங்களை மேடையில் காட்டக் கூடாது. மக்கள் இசைக்காகவும், ரசனைக்காகவும் வருகிறார்கள். இசை அவர்களை குணப்படுத்துகிறது. அவர்களின் பிரச்னைகளிலிருந்து தப்பிக்க உதவுகிறது. பார்வையாளர்களிடமிருந்து பெறும் அன்பு என்னை தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தூண்டுகிறது. உங்கள் இதயம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, ஆற்றல் தானாகவே வரும்.” என்றார்.