புதுச்சேரி துறைமுக மைதானத்தில் இன்று மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசினார். அப்போது, `இந்தியாவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான்’ என்று பேசியிருந்தார்.
அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், `புதுச்சேரி, காரைக்காலை விஜய் எப்போது சுற்றிப் பார்த்தார்? இலவச அரிசித் திட்டம் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுகூடத் தெரியாமல் விஜய் பேசுவது அர்த்தமற்றது’ என்று விமர்சித்திருந்தார். இந்த விவகாரம்தாம்தான் தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், அதன் பின்னணி குறித்து விசாரித்தோம்.

புதுச்சேரியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் கடைகளில் கோதுமை, மைதா, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகங்கள் நிறுத்தப்பட்டு, சிகப்பு அட்டைக்கு 20 கிலோ, மஞ்சள் நிற அட்டைக்கு 10 கிலோ என அரிசி மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 2016-ம் ஆண்டு கவர்னராக இருந்த கிரண்பேடி, அரிசி கொள்முதலில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடப்பதாகக் கூறியதுடன், அரிசிக்கு பதிலாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும்படி உத்தரவிட்டார்.
அதன் காரணமாக புதுச்சேரியில் செயல்பட்டு வந்த ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் ரங்கசாமி.