“இந்தியா எங்கிருந்து எண்ணெய் வாங்கப்போகிறது?’ – இது இப்போது அமெரிக்கா Vs ரஷ்யாவில் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்று.
ரஷ்யா – உக்ரைன் போரை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று கடுமையாக முயன்று வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அதற்கு ரஷ்ய அதிபர் புதின் இறங்கி வருவதாக இல்லை.
இதனால், அவருக்கு நெருக்கடி கொடுத்து வழிக்கு கொண்டுவர நினைக்கிறார் ட்ரம்ப்.
அதில் ஒன்று தான் – கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குகிறது. அதில் வரும் பணம் ரஷ்யாவின் உக்ரைன் உடனான போருக்கு உதவுகிறது என்று குற்றம்சாட்டி, கூடுதல் 25 சதவிகித வரியை இந்தியா மீது விதித்தது.
இதற்கு முன்னே, இந்தியா மீது 25 சதவிகித வரியை அமெரிக்கா விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வரி விதிப்பிற்கு பின், அவ்வப்போது ‘இந்தியா ரஷ்ய எண்ணெயை இனி வாங்காது என்று கூறிவிட்டது… உறுதியளித்துவிட்டது’ என்று பல முறை ட்ரம்ப் கூறிவிட்டார்.
இந்தத் திங்கட்கிழமை (பிப்ரவரி 2), ட்ரம்ப் இந்தியா மீதிருந்த வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்தார்… இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் குறித்தும் அறிவித்தார். அப்போதும் கூட இதைத் தான் சொன்னார்.
ஆனால், ‘அடுத்த நிலைப்பாடு என்ன’ என்பது குறித்து இந்தியா இந்த நொடி வரை வாயைத் திறக்கவில்லை.