மதுரையைச் சேர்ந்த ஓவியர் சத்ய பிரியா இன்ஸ்டாகிராமில் ‘மேகதூதம்’ என்ற பெயரில் அறியப்படுபவர். இவருடைய உழைக்கும் மக்கள் சார்ந்த ஓவியங்கள் மிக முக்கியமானவை. ஆகவே, இவரின் கலைச் சார்ந்த செயல்பாடுகள் குறித்து ஓர் கோடை மழைச் சாரலில் உரையாடத் தொடங்கினோம்.
“எனக்கு சொந்த ஊரு மதுரை சிம்மக்கல் தான். பி.ஏ. ஆங்கிலம் தியாகராஜர் காலேஜ்ல தான் படிச்சேன். அப்போ படிக்கும் போது காலேஜ் முடிச்சிட்டு போலீஸ் ஆகணுங்கிறது தான் ஆசையா இருந்தீச்சு. அதனால மதுரையிலே ஒரு அகாடமில படிச்சிட்டு இருந்தேன்.
அங்க படிச்சிட்டு இருக்கும் போது தான் எனக்கு முதல் லவ் ஆரம்பிச்சது. அந்த லவ் பிரேக்கப் ஆகும்போது அந்த ஃபீலீங்க்ஸ்ல இருந்து வெளிய வர்றதுக்காக சும்மா கிறுக்க ஆரம்பிச்சது தான் முதன்முதலா நான் வரைய ஆரம்பிச்சது. நான் வரைய ஆரம்பிக்கும் போது யாராவது இதைப்பாத்துட்டு பாராட்டுவாங்களான்னு எதையுமே நான் எதிர்ப்பார்க்கல.
அந்தச் சூழலில் ஒரு கையறு நிலையில இருக்கும் போது அந்த ஆர்ட் என்னை என்னவா மாத்துதுங்கிறது தான் எனக்கு முக்கியமா தெரிஞ்சது. நான் ஓவியம் வரைய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி போலீஸ் மேலயும் அரசு மேலயும் இருந்த கண்ணோட்டம் இப்போ வேற ஒண்ணா மாறியிருக்கு.
வரைய ஆரம்பிக்கும் போதே உருவங்களை தான் வரையனும்ன்னு நினைச்சேன். முதல்ல நமக்குள்ளே என்ன இருக்குதோ அதுதான் முதல்ல வெளிவரும் அதுக்கப்புறம் தான் அந்த கலை அரசியல் மையப்படவே ஆரம்பிக்கும். என்னுடைய உருவத்தை வச்சு என்னுடைய திறனை உனக்கு எதுவுமே தெரியாதுன்னு வேறொருத்தர் முடிவு பண்ணும் போது ஏற்படுற ஆதங்கம் தான் இதை நோக்கி என்னை வரைய வச்சிதுன்னு நினைக்கிறேன். நிறத்துலன்னு மட்டுமில்லாம சாதி, மதம், தொழில், பாலினம்ன்னு எல்லா விதத்திலும் மக்கள் அணுகப்படுறது எவ்வளவு கேவலமானது.
நம்ம வாழ்ற சூழல்ல இதுதான் அழகுங்கிறதை கட்டமைச்சி வச்சிருக்கிறாங்க. கருப்பா இருந்தாலும் நீ கலையா இருந்தாதான் அழகுன்னு சொல்றாங்க. அப்போ எனக்கு என்மேலயே நான் அழகு இல்லையாங்கிற கேள்வி உருவாகுது. என்னோட நிறத்தை வச்சி நான் இந்த சாதியாத்தான் இருப்பேன். எதுவுமே தெரியாம மக்கத்தான் இருப்பேன்னு அடையாளப்படுத்தப்படுறது எவ்வளவு சிக்கலானது.