ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 1) விறுவிறுப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
இதில் லக்னோ நிர்ணயித்த 142 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, 17.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 145 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
6 விக்கெட் வித்தியாசத்தில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி இந்தச் சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
வெற்றிக்குப் பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், “ஆட்டம் சீக்கிரம் முடிந்தாலும், நடுப்பகுதியில் போட்டி மிகவும் நெருக்கமாக மாறியது. அந்த நேரத்தில் எங்களுக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது, அதைப்பற்றித்தான் இடைவேளையின்போது பேசினோம்.
எங்களது பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருப்பதை உணர்ந்தோம். அதைப்பற்றி பந்துவீச வந்த ஒவ்வொரு வீரரிடமும் தெளிவாகத் தெரிவித்தோம்.