விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து சி.வி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சி.வி.சண்முகம், “ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசைத் தூக்கி எறியக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பு தற்போது நமக்குக் கிடைத்திருக்கிறது.

இங்கு வருகை தந்திருக்கின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துப் பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் மிகுந்த ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.
வேட்பாளர் யார் என்பது நமக்கு முக்கியமல்ல. இந்த மக்கள் விரோத அரசை வீழ்த்துவது மட்டுமே நமது லட்சியமாக இருக்க வேண்டும். இந்த அரசு ஒரு கஞ்சா அரசு, போதை அரசு மற்றும் ஏழைகளைப் பற்றிச் சிந்திக்காத அரசு. ஸ்டாலின் அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தை மக்களிடமும், வாக்காளர்களிடமும் கொண்டு செல்லுங்கள்.