இந்திய அரசு செயலரிடமிருந்து (SECRETARY OF STATE) ஒப்புதல் கிடைத்தவுடன், மெட்ராஸ் மாகாண அரசு, மேட்டூர் அணைத் திட்டத்தை உடனடியாக முன்னெடுக்கத் தொடங்கியது. 1925 ஜூலை 20 ஆம் தேதி, மெட்ராஸ் மாகாண கவர்னர் “லார்டு விஸ்கவுன்ட் கோச்சன்” அவர்கள் கலந்துகொண்ட சிறப்பு விழாவில், மேட்டூர் அணையின் பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன.
அப்போது அணையின் வலது புறம் பாறைகள் நிறைந்த இடத்தில் கலவை இயந்திரம் பொருத்தும் வேலை நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு விழா நாளன்று, கல்வெட்டுத் திறப்பு மற்றும் பாறை வெடிப்பு நிகழ்ச்சி மூலம் கட்டுமானப் பணி பூர்வாங்கமாக ஆரம்பிக்கப்பட்டது. தொடக்க விழாவுக்கு ஏராளமான விருந்தினர்களும், பார்வையாளர்களும் வந்திருந்தனர்.
கவர்னர் தனது உரையில், இந்தத் திட்டம் மெட்ராஸ் மாகாணத்தின் எதிர்கால விவசாய செழிப்புக்கு அடிப்படை அம்சமாக அமையும் என வலியுறுத்தினார். ஆர்தர் காட்டன் 1834-ல் முன்மொழிந்த யோசனை, பல்வேறு தாமதங்களும் சிக்கல்களும் கடந்து இப்போது செயல்படத் தொடங்கியதை அவர் வரலாற்றுப் பார்வையில் எடுத்துக்காட்டினார். மேலும், இனி கோதாவரி அல்லது கிருஷ்ணா போல நேரடி பாசனத் திட்டங்கள் சாத்தியமில்லை; பெருவெள்ளங்களைத் தேக்கி வைப்பதே ஒரே தீர்வு என்று குறிப்பிட்டார். அதற்குச் சிறந்த உதாரணமாக காவிரி–மேட்டூர் திட்டம் என்று புகழ்ந்தார்.
அதன் பின், கவர்னர் பவானி ஆற்றில் எதிர்காலத்தில் ஒரு நீர்த்தேக்கத் திட்டம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார். பல பொறியாளர்கள் – மேஜர் லா ஃபோர்ட், மேஜர் ஃபிரேசர், மோஸ், கர்னல் எல்லீஸ் போன்றோர் – முன்மொழிந்த திட்டங்களின் சுருக்க வரலாறும் உரையில் இடம் பெற்றது. இறுதியாக, சென்னை–மைசூர் நீர்ப் பங்கீடு பிரச்சினை 1924 ஒப்பந்தத்தின் மூலம் தீர்க்கப்பட்டு, மேட்டூர் திட்டம் முன்னேறியது என்றாலும் சுமார் 15 வருட காலம் தள்ளிப்போனதை அவர் விளக்கினார்.
தொடக்கத்தில், திட்டம் 200 அடி உயரம், 6352 அடி நீளமுள்ள அணையை உள்ளடக்கியது என்றும், மொத்த நீர்த்தேக்கம் 93,500 மில்லியன் கன அடி கொள்ளளவு எனவும் நிர்ணயிக்கப்பட்டது. கட்டுமானச் செலவு மட்டும் ரூ. 375 லட்சம், கால்வாய் அமைப்புகளுக்கு ரூ. 157 லட்சம் என மதிப்பிடப்பட்டது. மொத்தத்தில், 3,01,000 ஏக்கர் நிலங்களுக்கு முதலாம் போகமும், 90,000 ஏக்கர் நிலங்களுக்கு இரண்டாம் போகமும் பாசன வசதி ஏற்படும். வருவாய் ஆண்டுக்கு ரூ. 46.5 லட்சம் என கணிக்கப்பட்டது போன்ற விபரங்களை எடுத்துரைத்தார்.