இரவில் நகைக்கடையில் திருடி விட்டு குடிபோதையில் கழுதையில் ஏறி தப்பிச்சென்ற நபர் | Man steals from a jewelry store at night and escapes on a donkey while drunk-

Spread the love

துருக்கியில் நகைக்கடை ஒன்றில் திருடிவிட்டு ஒருவர் சர்வ சாதாரணமாகத் தனது கழுதையில் ஏறிச்சென்ற சம்பவம் வைரலாகி இருக்கிறது. அங்குள்ள காய்சரி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள நகைக்கடை ஒன்றில் இரவு நேரத்தில் மர்ம நபர் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த தங்க நகைகளைத் திருடிவிட்டுச் சென்று இருந்தார். இதையடுத்து நகைக்கடை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி, போர்க்லிப்ட் எனப்படும் பொருட்களைத் தூக்கப் பயன்படும் வாகனத்தைப் பயன்படுத்தி நகைக்கடை ஷட்டரைத் தூக்கி உள்ளே சென்று திருடும் காட்சி பதிவாகி இருந்தது.

பதிவான காட்சி

பதிவான காட்சி

அந்த நபர் திருடிக்கொண்டு கடைக்குள் இருந்து வெளியில் வந்து சர்வ சாதாரணமாக அங்கு நின்று கொண்டிருந்த தனது கழுதையில் ஏறி வீட்டிற்குச் சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். குற்றவாளியிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சம்பவத்தன்று வீட்டில் நன்றாகக் குடித்துவிட்டு தனது கழுதையில் அருகில் உள்ள நகருக்குச் சென்று கொண்டிருந்தான்.

மேலும் மது அருந்தவேண்டும் என்று நினைத்து அருகில் ஏதாவது மதுபானக்கடை இருக்கிறதா என்று பார்த்துள்ளார். வழியில் போர்க்லிப்ட் வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. உடனே கழுதையில் இருந்து இறங்கி அந்த போர்க்லிப்ட் வண்டியை சாவி இல்லாமல் திருட்டுத்தனமாகத் திறந்து அந்த வண்டியை ஓட்டிச்சென்று அருகில் இருந்த நகைக்கடை கதவை போர்க்லிப்ட் மூலம் திறந்துள்ளார்.

உள்ளே சென்று அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த தங்க நகைகளைத் திருடிக்கொண்டு நகைக்கடையை விட்டு வெளியில் வந்துள்ளார். அங்கு அவரது கழுதை நின்று கொண்டிருந்தது. உடனே அதே கழுதையில் ஏறி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றார்.

அவர் கழுதையில் தப்பிச்சென்ற வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. போலீஸார் அத்திருடனைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *