இரு தொகுதிகளை குறிவைக்கும் சிற்றரசு; பின்னணியில் உதயநிதி? – யாருக்கு சீட், யாருக்கு கல்தா?

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோர் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்துவருகின்றனர். கடைசி நாளான மார்ச் 6-ம் தேதி சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு விருப்ப மனு தாக்கல் செய்திருப்பது தி.மு.க-வுக்குள் பேசு பொருளாகியிருக்கிறது.

தி.மு.க-வின் சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளரான சிற்றரசு, துணை முதல்வரும் தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதியின் தீவிர ஆதரவாளர். சேப்பாக்கம் – திருவேல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய மூன்று தொகுதிகள் அவரது மாவட்டத்தின்கீழ் வருகின்றன. எனவே துணை முதல்வரின் சேப்பாக்கம் – திருவேல்லிக்கேணி தொகுதியை சிற்றரசுதான் கண்காணித்து வருகிறார்கள். பொதுவாக தி.மு.க-வில் மாவட்டப் பொறுப்பில் இருப்பவர்கள் எம்.எல்.ஏ-க்களாக இருப்பது வழக்கம். ஆனால், சிற்றரசு மாநகராட்சி பொறுப்பில்தான் இருக்கிறார்.

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள் சிலர், “சிற்றரசு மாவட்டத்தின்கீழ் வரும் அண்ணாநகர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் எம்.கே மோகன். வரும் சட்டமன்றத் தேர்தலில் அவரது மகன் கார்த்திக்கை களமிறக்கவுள்ளார்.

அண்ணா நகர் தொகுதி தனக்கு வேண்டும் என விருப்ப மனுவையும் தாக்கல் செய்துவிட்டார் கார்த்திக். தந்தை-மகன் இருவருமே ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமானவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சிற்றரசு, எழிலன்

அதேபோல், ஆயிரம் விளக்கு தொகுதியை மீண்டும் மருத்துவர் எழிலன் எதிர்பார்க்கிறார். இதற்கிடையில்தான், மாநகராட்சி பணிகள் நிலைக்குழு தலைவராக இருக்கும் சிற்றரசு, தனது மாவட்டத்துக்கு கீழ்வரும் ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய இரண்டில் ஒன்றை கேட்டிருக்கிறார்” என்றவர்களிடம், `ஆயிரக்கணக்காணோர் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள், சிற்றரசு தாக்கல் செய்வதில் என்ன விஷேசம்’ எனக் கேட்டோம்,

“தி.மு.க-வில் அடையாளம் இல்லாத நிர்வாகிகள் தாமாக விருப்ப மனு அளிப்பார்கள். ஆனால், மா.செ-க்கள் போன்ற முக்கியப் பொறுப்பில் தலைமையின் அனுமதியில்லாமல் விருப்ப மனு தாக்கல் செய்வதில்லை. அதிலும் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறனுடன் அவர் வந்திருந்தது குறிப்பிடதக்கது. சிற்றரசு-வை பொறுத்தவரை எந்தவொரு காரியமாக இருந்தாலும் உதயநிதியிடம் அனுமதிபெறாமல் செய்யமாட்டார். எனவே உதயநிதியின் அனுமதியின் பெயரிலேயே விருப்பமனு அளித்திருப்பார்.” என்றார்.

யாருக்கு சீட்.. யார்க்கு கல்தா.. பொறுத்திருந்து பார்ப்போம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *