இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 7 விசைப்படகுகளை மீட்டு கொண்டு வர ராமேசுவரத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் இலங்கை சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் இருந்து கடந்த 2022-23 ஆம் ஆண்டு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற சார்லஸ், ஹரிகரன், மைக்கேல்ராஜ், இருதயராஜ், தட்சிணமூர்த்தி, வேல்முருகன், வினால்டன் ஆகியோரின் 7 விசைப்படகுகள் மற்றும் மீனவர்களை இலங்கை கடற்பைடயினர் கைது செய்தனர். இதில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்களின் படகுகள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இதில், அபராதத்துடன் படகுகள் விடுதலை செய்யப்பட்டன. இந்த படகுகள் தற்போது மயிலிட்டி, காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள் குழுவினர் இலங்கை சென்று படகுகளை மீட்டு கொண்டு வர அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, விடுவிக்கப்பட்ட படகுகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ள ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவ சங்கத்தலைவர் ஜேசுராஜா தலைமையில் 7 படகு உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என 14 பேர் கொண்ட குழுவினர் இரண்டு விசைப்படகுகளில் இலங்கை யாழ்பாணம் புறப்பட்டனர்.