தற்போது இளைஞரணி செயலராக துணை முதல்வர் உதயநிதி உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில், இளைஞரணியைச் சேர்ந்த ஒரு சிலருக்கு தான் சீட் வழங்கப்பட்டது. அதனால், வரும் சட்டசபை தேர்தலில், 50 பேருக்கு சீட் வழங்க வேண்டும் என, ஸ்டாலினிடம் உதயநிதி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் திமுகவே 170 தொகுதிகள் வரையே போட்டியிட வாய்ப்பு உள்ளதால் 50 பேருக்கு வாய்ப்பு வழங்க முடியாது என உதயநிதியிடம் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
இதனால் குறைந்த பட்சம் 40 சீட்களாவது வழங்க வேண்டும் என தொகுதி பட்டியலையும், யார் வேட்பாளர் என்பதையும் குறிப்பிட்ட தலைமையிடம் உதயநிதி கொடுத்து இருக்கிறார். அந்த பட்டியலில் இடம் பெற்றோரில் யாருக்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து அறிய விரும்பிய முதல்வர் ஸ்டாலின், பட்டியலை வியூக அமைப்பான ‘பென் நிறுவனம் மற்றும் தமிழக உளவுத்துறை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, பட்டியலில் இடம் பெற்றோர் குறித்த விபரங்களையும், அவர்களுக்கு சீட் வழங்கினால் வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்பது குறித்தும், உளவுத்துறை மற்றும் ‘பென் அமைப்பினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இதற்கிடையில், இந்த தகவலை கேள்விப்பட்ட கட்சியின் சீனியர் நிர்வாகிகள் பலரும், பட்டியலில் இடம் பெற்றோர் போட்டியிட திட்டமிட்டிருக்கும் தொகுதிகளில் தங்களுக்கோ, தங்களுடைய ஆதரவாளர்களுக்கோ வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.
