கடந்த மாதம், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில், “MILAN 2026′ என்கிற மிகப்பெரிய கப்பற்படைப் பயிற்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட பல நாடுகளில் ஈரானும் ஒன்று. இந்தப் பயிற்சியில் பங்குகொண்ட ஈரானிய கடற்படை போர்க்கப்பலான IRIS தேனா நேற்று ஈரான் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, இலங்கை கடற்பரப்பிலிருந்து 40 கடல் மைல் தூரத்தில் அந்தக் கப்பல் சென்றுகொண்டிருக்கும்போது, அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் தாக்கும் ஏவுகணையான டார்பிடோவை ஏவி மூழ்கடித்துள்ளது.

இப்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி, 87 பேரின் உடல்களை இலங்கைக் கடற்படை மீட்டுள்ளனர். 32 பேர் இலங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார். அவர் எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் விருந்தினர் கப்பலான IRIS தேனாவை அமெரிக்கா தாக்கியிருக்கிறது. ஈரானின் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் ஓர் அட்டூழியத்தை அமெரிக்கா செய்திருக்கிறது. 130 மாலுமிகள் கப்பலில் இருந்தனர். அது அமைத்த முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்பட வேண்டியிருக்கும்” என எச்சரித்திருக்கிறார்.