ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதன் காரணமாக ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மட்டுமில்லாது வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இலக்குகளை குறி வைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதன் காரணமாக வளைகுடா நாடுகள் தங்களது வான்வழி மற்றும் விமான நிலையங்களை மூடி உள்ளன.
இதன் காரணமாக நேற்று முன்தினம் துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 2-வது நாளான நேற்று சென்னையில் இருந்து வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் செல்லும் 17 புறப்பாடு விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு வரவேண்டிய 16 வருகை விமானங்களும் என் 33 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து தங்களுக்கு இருப்பிடங்களுக்கு திரும்பி சென்றனர்.
வளைகுடா, மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 3-வது நாளாக இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புறப்பாடு விமானங்கள் 18 மற்றும் வருகை விமானங்கள் 18 என மொத்தம் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.எனவே மற்ற விமானங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கும் பயணிகளும் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானம் வந்து செல்லும் நேரம் உள்ளிட்டவைகளை கேட்டு தெரிந்து கொண்டு தங்கள் பயணத்தை அமைத்து கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக பயணிகள் கடும் இன்னலை அனுபவித்து வருகின்றனர்.
