அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கிய இந்தப் போர், தற்போது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவி வருகிறது.
இன்று அதிகாலை ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், போர் விமானங்கள் வானில் வட்டமிட்டதாகவும் ஏஎஃப்பி (AFP) செய்தியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில், போர் தீவிரமடைந்துள்ள நிலையில், எகிப்து முதல் மேற்கு ஆசியா முழுவதும் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அந்தந்த நாடுகளை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் போர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், “இந்தப் போரின் நோக்கம் ஈரானின் ஏவுகணைகள், கடற்படை மற்றும் அணுசக்தித் திட்டங்களை அழிப்பதே தவிர, ஈரானிய ஆட்சியை வீழ்த்துவது அல்ல. நாங்கள் 4 முதல் 5 வாரங்கள் வரை போரைத் திட்டமிட்டிருந்தோம், ஆனால் தேவைப்பட்டால் நீண்ட காலம் போரிடும் திறன் எங்களிடம் உள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.