ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: பங்குச்சந்தையில் நிமிடங்களில் ரூ.12 லட்சம் கோடி இழப்பு!

Spread the love

வளைகுடா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. ஈரான் தனது நாட்டு எல்லையில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழித்தடத்தை அடைத்ததால் அந்த வழியாக கச்சா என்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வழித்தடத்தில் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் கூறி இருக்கிறார். ஆனால் அவரது பேச்சை யாரும் நம்ப தயாராக இல்லை. இது தவிர சவுதி அரேபியா உட்பட சில வளைகுடா நாடுகளில் எண்ணெய் கிணறுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இப்போர் 10வது நாளை எட்டி இருக்கிறது. இது போன்ற காரணங்களால் உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

ஒரு பேரல் கச்சா எண்ணெய் 105 டாலரை தொட்டு விட்டது. இதனால் உலக அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்றைய இந்திய பங்குச்சந்தையில் கடுமையான வீழ்ச்சி காரணப்பட்டது.

காலையில் பங்குச்சந்தை திறந்தவுடன் சென்செக்ஸ் 2400 புள்ளிகள் குறைந்து 76424 புள்ளிகளாக இருந்தது. இதே போன்று நிஃப்டி 700 புள்ளிகள் குறைந்து 23750 புள்ளிகளாக இருந்தது. காலையில் பங்குச்சந்தை திறக்கப்பட்ட 10 நிமிடங்களில் முதலீட்டாளர்களுக்கு 12.39 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. சந்தை தொடங்கிய போதே பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 4 சதவீதத்திற்கும் மேலான சரிவுடன் தொடங்கியது. இது தவிர நிஃப்டி பேங்க் (Nifty Bank) மற்றும் நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆகிய துறைகளும் மோசமான சரிவை சந்தித்தது.

நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களான நிஃப்டி மிட்கேப் (MidCap) மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் (SmallCap) ஆகிய இரண்டுமே தலா 2.67 சதவீத சரிவை சந்தித்தது. மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில், ஐ.டி துறை மிகக் குறைந்த சரிவைச் சந்தித்து, ஓரளவு தாக்குப்பிடித்த துறையாக இருந்தது. இண்டிகோ ஏர்லைன்ஸ் பங்குகள் அதிகபட்சமாக 8 சதவீத இழப்பை சந்தித்தது. டாடா ஸ்டீல், எஸ்பிஐ, மாருதி சுசுகி ஆகியவை தலா 5 சதவீத சரிவை எதிர்கொண்டது. கடந்த வெள்ளிக்கிழமையும் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில், இன்று பங்குச்சந்தை மேலும் ஒரு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *