"ஈரான் மீதான போர் நிறுத்தம் 'ஓகே'; ஆனால், லெபனான் மீது தாக்குதல் தொடரும்" – நெதன்யாகு

Spread the love

இரண்டு வார போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துவிட்டார். ‘எங்களைத் தாக்கவில்லை என்றால் நாங்களும் தாக்குதல் நடத்த மாட்டோம்’ என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த ஈரான் போர் தொடங்கியதற்குக் காரணமே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்று கூறப்படுகிறது. அவர்தான் ட்ரம்பிடம் பேசி அமெரிக்காவையும் இந்தப் போருக்குள் வர வைத்தார் என்று சொல்கிறார்கள்.

ஈரான், வளைகுடா நாடுகள்
ஈரான், வளைகுடா நாடுகள்

அப்படிப்பட்ட நெதன்யாகு இந்தப் போர் நிறுத்தத்தை எப்படி பார்க்கிறார் என்று பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவு அவரது எக்ஸ் கணக்கில் இருந்து வெளியிடப்படவில்லை. இஸ்ரேலின் பிரதமர் அலுவலக எக்ஸ் பக்கத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில் கூறப்பட்டிருப்பது என்ன?

“ஜலசந்தி திறப்பதோடு, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்தினால், இரண்டு வாரத்திற்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துகிறோம் என்கிற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கிறது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானின் பக்கத்து நாடுகளான அரபு நாடுகள் மற்றும் உலகத்திற்கும் ஈரான் அணு ஆயுத, ஏவுகணை மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் அமெரிக்காவின் முயற்சியையும் இஸ்ரேல் ஆதரிக்கிறது.

நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைகளில் இந்த இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு வாரக் கால போர் நிறுத்தத்தில் லெபனான் மீதான தாக்குதல் அடங்காது”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *