ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: அவசர நிலை பிரகடனம்: வளைகுடா நாடுகளில் பதற்றம்  – Kumudam

Spread the love

ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் ஜோம்ஹாரி ஆகிய முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து ஏவுகணைகள் வந்து விழுந்தன. இந்தத் தாக்குதலால் நகரின் பல இடங்களில் விண்ணை முட்டும் அளவிற்குப் புகை மண்டலங்கள் காணப்படுகின்றன. பல உயரமான கட்டிடங்கள் தீப்பற்றி எரிவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்குச் முன்னதாக, ஈரானுடன் நடைபெற்று வரும் அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். “ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை வழங்கத் தயாராக இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவின் இந்த அதிருப்தியைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது “முன்னெச்சரிக்கை தாக்குதலை” நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் அடுத்தடுத்த தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் நாடு முழுவதும் அபாயச் சங்கொலிகள் (Sirens) எழுப்பப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், பாதுகாப்பான நிலத்தடி அறைகளில் தஞ்சம் புகுமாறும் ஈரான் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம், ஈரானிடமிருந்து எந்நேரமும் பதில் தாக்குதல் வரக்கூடும் என்பதால், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் நாடு முழுவதும் அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளார். இஸ்ரேலிய மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், ராணுவத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். “இஸ்ரேல் மீதான அச்சுறுத்தல்களை வேரோடு அழிக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று இஸ்ரேல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *