கொங்கு நாட்டு சிவன் கோயில்களில் மிகவும் பழமையான சிறப்பை பெற்றது ஈரோட்டில் உள்ள மகிமாலீஸ்வர் கோயில். மேற்கு நோக்கி அமைந்துள்ள இத்திருத்தலத்தில் அடியவருக்கு அடியவராக போற்றப்படும் சிவ பெருமான் மகிமாலீஸ்வரராக, மங்களாம்பிகை அம்மனுடன் மகாலிங்கமாக அருள்பாலித்து வருகிறார்.
2000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலில் சுந்தரர், அப்பர் ஆகியோர் வழிபாடு செய்துள்ளன. இந்தக் கோயிலில் மகாலட்சுமி, துர்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. மங்களாம்பிகை தெற்கு நோக்கி தனிச் சந்நிதியில் சிவனுக்கு வலப்புறமாக, திருமணக் கோலத்தில் இருப்பதுபோல் காட்சி அருள்கிறார். எனவே, அம்பிகையை வணங்கினால், திருமணப்பேறும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மஹிமாலீஸ்வரரை மனம் உருகி வேண்டினால், நம் கவலைகள் அனைத்தையும் தீர்ப்பார். இந்த ஆலயத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று திருமணத் தடைகள் நீங்குவதற்காக சிறப்பு பூஜை நடை பெறுகிறது. தொடர்ந்து 11 வாரம் விரதமிருந்து, இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு ஸ்வாமியைத் தரிசித்து பிரார்த்திக்கொண்டால், திருமணத் தடை விரைவில் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
இக்கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சிகொடுக்கிறது. 63 நாயன்மார்கள், 16 வகை லிங்கங்களும் இங்கே அமைக்கப்பட்டுள்ளன.
மகா சிவராத்திரியன்று மஹிமாலீஸ்வரரை வழிபடுவதால், பலன் பன்மடங்கு அதிகம் கிடைக்குமாம். அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் இங்கு வந்து மஹிமாலீஸ்வரரை வழிபட்டு, வேண்டிய பலன்களைப் பெற்றுச் செல்கிறார்கள்.