உடல் உறுப்பு தானம் என்பது ஒரு ஆன்மீக நடவடிக்கையும் மனித இயல்பின் மிக உயர்ந்த தார்மீக எடுத்துக்காட்டு என்று தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், இதனால் மனிதகுலத்திற்கு சேவை செய்யும் கருணை மற்றும் தன்னலமற்ற தன்மையின் ஆழமான நற்பண்புகள் பிரதிபலிக்கப்படுவதாக கூறினார்.
ஜெய்ப்பூரில் உடல் தானம் செய்தவர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் வகையில் ஜெயின் சமூக அமைப்பும், தில்லியின் உடல் உறுப்பு தான சங்கமும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், உடல் உறுப்பு தானம் குறித்து மக்கள் உணர்வுபூர்வ முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதனை மனிதகுலத்திற்கு சேவை செய்யும் உன்னத பாரம்பரியத்துடன் இணைந்த ஒரு பணியாக மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உலக உறுப்பு தான நாளின் மையக்கருத்தான “இன்று ஒருவரின் புன்னகைக்கு காரணமாக இருங்கள்” என்பதை எடுத்துரைத்த தன்கர், உடல் உறுப்பு தானம் என்ற உன்னத நோக்கத்திற்காக ஒவ்வொருவரும் தனிப்பட்ட மற்றும் குடும்ப அர்ப்பணிப்பை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் இந்த உடல் உறுப்பு தானமானது பரவலான சமூக நலனுக்கான ஒரு கருவியாக மாறும்.
உடல் உறுப்பு தானத்தில் ‘வர்த்தகமயமாதல்’ அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த தன்கர், உடல் உறுப்புகளை சமுதாயத்திற்காக சிந்தித்து தானம் செய்ய வேண்டுமே தவிர, நிதி ஆதாயத்துக்காக செய்யக்கூடாது. உறுப்பு தானம் வேண்டி காத்திருக்கும் திறமையானவர்களுக்கு நாம் உதவும்போது, அவர்கள் இந்த சமூகத்திற்கான பொறுப்புள்ள ஒரு சொத்தாக மாற்றப்படுகிறார்கள்.