நடிகர் விஜய் தேவரகொண்டா – நடிகை ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் இன்று (பிப். 26) பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றிருக்கிறது.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து இருவரும் டியர் காமரெட் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இதனிடையே இருவரும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் பிப்ரவரியில் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்த நிலையில் ராஷ்மிகா திருமண அழைப்பிதழை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா – நடிகை ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் உதய்பூரில் இன்று (பிப். 26) பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றிருக்கிறது.
திருமணப் புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்திருக்கின்றனர். இந்த ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் குறித்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்டிருக்கும் பதிவில், ” உண்மையான அன்பு என்றால் என்ன என்பதை எனக்குக் காட்டியவர். பெரிய கனவுகளைக் காண்பதில் தவறே இல்லை என்று தினமும் என்னிடம் சொல்பவர்.
நான் நினைத்துப் பார்ப்பதை விடவும் என்னால் இன்னும் உயரிய சாதனைகளைச் செய்ய முடியும் என்று தொடர்ந்து எனக்கு நம்பிக்கை அளிப்பவர். நண்பர்களுடன் பயணம் செய்வதுதான் உலகின் மிகச்சிறந்த விஷயம் என்பதை எனக்குப் புரிய வைத்தவர்.
உண்மையைச் சொல்லப்போனால், இவரைப் பற்றி என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும். இன்று நான் எந்த மாதிரியான பெண்ணாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டேனோ, அந்தப் பெண்ணாக நான் மாறியிருக்கிறேன். அதற்குக் காரணம் நீங்கள் தான்! நான் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவள். உன் மேல் நான் வைத்திருக்கும் உணர்வுகளை விவரிக்க எனக்கு எப்போதும் வார்த்தைகள் போதாது.

இப்போது எனது வெற்றிகள், போராட்டங்கள், மகிழ்ச்சி, துக்கம், வாழ்க்கை என எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் கிடைத்துள்ளது – ஏனென்றால் இவை அனைத்திற்கும் சாட்சியாக, இவை அனைத்திலும் ஒரு பெரிய அங்கமாக நீ என்னுடன் இருக்கிறாய். உன் மனைவியாகப் போகிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது! உன் மனைவியாக அழைக்கப்படுவதை எண்ணி பெருமை கொள்கிறேன். இனி கொண்டாட்டக் காலம் தான்!” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.