தி.மு.க கூட்டணிக்குள் நடக்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தமிழக அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது. இதற்கிடையில் ‘உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்’ என்ற தி.மு.க-வின் கண்டிஷனுக்கு ம.நீ.ம க்ரீன் சிக்னல் காட்டியிருப்பதாக ஆழ்வார்ப்பேட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனை கூட்டணிக்குள் கொண்டுவந்தும், ம.நீ.ம-வுக்குப் போட்டியிட ஒரு சீட்டைக்கூடத் தரவில்லை தி.மு.க. ‘உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் ஒரு எம்.பி தொகுதி தருகிறோம்’ என்ற அறிவாலயத்தின் ஆஃபரை அன்றைக்கு நிராகரித்தார் கமல்ஹாசன்.
ஆகையால், ஒரு ராஜ்ய சபா சீட் தரப்பட்டது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என அழுத்தமாக சொல்லிவந்தனர் ம.நீ.ம-வினர். அதற்காக தேர்தல் ஆணையத்தை அணுகி ‘டார்ட் லைட்’ சின்னத்தை பெற்றனர். ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து ம.நீ.ம விலகியிருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
நம்மிடம் பேசிய ம.நீ.ம மாநில நிர்வாகிகள் சிலர், “மற்ற கட்சிகளின் சின்னத்தில் ம.நீ.ம வேட்பாளர்கள் நிற்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் எங்கள் தலைவர் கமல். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை நான்குமுனைப் போட்டியில் வெற்றித் தோல்விகளை சொற்ப வாக்குகள்கூட தீர்மானிக்கலாம். ஆகையால், தேர்தல் களத்தின் தீவிரத்தை புரிந்துகொண்டு, தி.மு.க-வின் கோரிக்கைக்கு ஏற்ப உதயசூரியன் சின்னத்தில் ம.நீ.ம வேட்பாளர்களை களமிறக்க ஓகே சொல்லிவிட்டார் எங்கள் தலைவர் கமல்.

உதயசூரியன் சின்னத்திலேயே நிற்பதால் 4-5 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். தி.மு.க-வுக்கும் ம.நீ.ம-வுக்கு இடையே இழுபறியாக இருந்தது சின்னம் விவகாரம்தான். அது முடிவுற்ற நிலையில் விரைவிலேயே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றனர்