“உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்; சங்கி படையையே அமித் ஷா அழைத்துவந்தாலும்.!" – முதல்வர் ஸ்டாலின் காட்டம்

Spread the love

திருவண்ணாமலையில், நேற்று மாலை தொடங்கி, இரவு வரை நடைபெற்ற தி.மு.க இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது, “நாங்கள் சந்திக்காத சோதனைகள் இல்லை; துன்பங்கள் இல்லை; துரோகங்கள் இல்லை; அத்தனையையும் தாண்டி, கழகத்தின் லட்சியப் பயணத்துக்குத் துணை நின்றது நாங்கள் வளர்த்த இளைஞரணி. இப்போது, அந்த பணியைத் தம்பி உதயநிதியிடமும், உங்களிடமும் ஒப்படைத்திருக்கிறோம். அவரும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாகச் செயல்படுகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இறங்கி அடிக்கிறார். கொள்கை எதிரிகள், `உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்’ என்று புலம்புகிறார்கள். அந்த அளவிற்குக் கொள்கையில் ஸ்ட்ராங்காக இருக்கிறார். `கழகத்திற்கு எது தேவை?’ என்று, உணர்ந்து செயல்படுகிறார் உதயநிதி.

முதலமைச்சர் ஸ்டாலின்

ஐடியாலஜிக்கல் ஃபைட்

இப்போது நம்முடைய தோளில், தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும் காக்க வேண்டிய கடமை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவையும் நாட்டின் பன்மைத்துவத்தையும் காக்க வேண்டிய கடமை இருக்கிறது. இந்தியாவிலேயே பி.ஜே.பி-க்கு எதிராக ஐடியாலஜிக்கல் ஃபைட் (கருத்தியல் போர்) செய்துகொண்டு இருக்கும் ஒரே மாநிலக் கட்சி, தி.மு.க தான். அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது, நம் தமிழ்நாட்டை மட்டும்தான்.

அதனால்தான் அமித்ஷா போன்றோருக்கு நம் மீது எரிச்சல். அண்மையில் கூட, என்ன பேசினார்? `பீகாரில் ஜெயித்துவிட்டோம். அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்’ என்று சொல்கிறார். அமித்ஷா அவர்களே, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு. எங்களின் கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே… அன்புடன் வந்தால், அரவணைப்போம். ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம். உங்களை ஜெயித்துக் காண்பிப்போம்.

இங்கு கூடியிருக்கும் இளைஞரணி தம்பிகளுக்கு சொல்கிறேன். ஒவ்வொரு தலைமுறைக்கு முன்பும் வரலாறு ஒரு கடினமான கேள்வியை முன்வைக்கும். அதற்கு `ரியாக்ட்’ செய்ய முடியாமல், மண்டியிடுகின்றவர்களை, வரலாறும் மறந்துவிடும்; மக்களும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால், வரலாறு முன்வைக்கும் கேள்விகளை எதிர்த்து, ஃபைட் செய்து வரலாற்றைத் திருத்தி எழுதுகின்றவர்களை, மக்களும் மறக்க மாட்டார்கள். வரலாறும் மறக்காது. நீங்கள் எல்லாம் வரலாறு படைக்க வேண்டும். அதற்கு எப்போதும் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். மக்களுக்காக இருப்பதுதான் அரசியல். அந்த அரசியலை செய்யத்தான், உங்கள் எல்லோருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. மக்களிடம் செல்லுங்கள். அவர்கள் கூடவே வாழுங்கள். அவர்களுக்காகக் குரல் கொடுங்கள். இதுதான் உங்களுக்கான டாஸ்க்.

முதலமைச்சர் ஸ்டாலின்

அரசியலில் சொகுசு எதிர்பார்க்காதீர்கள். இங்கு கடுமையாக உழைப்பவர்களுக்குத்தான் இடம் கிடைக்கும். அந்த இடம், கட்சிப் பொறுப்பில் மட்டுமல்ல; மக்கள் மனதிலும் நிரந்தரமாக இருக்கும். தம்பி உதயநிதி பேசும்போது, `வரும் தேர்தலில் இளைஞரணிக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என்று கேட்டார். அவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது, இன்றைக்கு உள்ளாட்சியில், சட்டமன்றத்தில், அமைச்சரவையில், நாடாளுமன்றத்தில் நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்குச் செயல்படும் பல பேர், இளைஞரணியில் இருந்து வந்தவர்கள்தான். நாளைக்கு உங்களிலிருந்து பலரும், அந்த இடத்திற்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நிச்சயம் வரத்தான் போகிறீர்கள். அதற்குத் தயாராக, இளைஞரணி எனும் தாய் வீட்டை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இங்கே உதயநிதி சொன்னதுபோல, நீங்கள் ஒவ்வொருவரும் மினிமம் பத்து இளைஞர்களை உங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களிடம் அரசியல் உணர்வை, நம்முடைய கொள்கைகளை, திராவிட மாடல் அரசின் சாதனைகளைக் கொண்டு செல்லுங்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வாக்கும், அவர்கள் குடும்பத்தினரின் வாக்குகளும், அவர்கள் நண்பர்களின் வாக்குகளும் உதயசூரியனுக்கும், நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கும்தான் கிடைக்க வேண்டும்.

கடந்தகால ஆட்சியாளர்கள், செய்த தவறுகளை, குற்றங்களை, துரோகங்களை மக்களுக்கு நினைவுபடுத்துங்கள். அவர்கள் மீண்டும் வந்தால், தமிழ்நாடு என்னென்ன ஆபத்துகளைச் சந்திக்கும் என்று மக்களிடம் சொல்லுங்கள். நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்குத் தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கும், நம்முடைய திட்டங்களைப் பற்றி எடுத்துச்சொல்லுங்கள். நான் உறுதியோடு சொல்கிறேன், நாட்டில், ஏன் உலகத்திலேயே எந்த ஆட்சியும் நாம் செய்திருக்கும் அளவிற்கு முத்திரைத் திட்டங்களைச் செய்திருக்க மாட்டார்கள்.

ஸ்டாலின் – உதயநிதி

தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளிய அ.தி.மு.க-வினர் தாங்கள் ஏதோ உத்தமர்கள்போல் வேஷம் போட்டுக்கொண்டு வந்து வாக்கு கேட்பார்கள். அதேபோல், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கும் பா.ஜ.க-வினர், வழக்கம்போல் தங்களின் பொய்ப் பரப்புரைகளையும், பதற்றத்தை உண்டாக்கும் அரசியலையும் வைத்து, தேர்தலை சந்திக்கலாம் என்று வருவார்கள். இவர்களிடம் கைகட்டி, வாய் பொத்தி, அடிமை சேவகம் செய்து, `தமிழ்நாட்டின் உரிமைகளை தமிழர்களின் சுயமரியாதையை அடகு வைக்கலாம்’ என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்யப் பல கூட்டங்கள் இருக்கிறது.

2026 தேர்தலில், மக்கள் முன்னால் இருக்கும் கேள்வி என்ன என்றால், `இன்னும் ஐம்பது ஆண்டுகள் முன்னோக்கி நடைபோட போகிறோமா? இல்லை. ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுக்க முயற்சி செய்பவர்களுக்கு அடிபணியப் போகிறோமா?’ அந்தக் கேள்விக்கு மக்கள் அளிக்கப் போகும் விடை, `திராவிட மாடல் ஆட்சி 2.0′. ஏன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தில்தான், தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழினத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. அந்த எதிர்காலம், வளம் நிறைந்ததாக, ஒளி நிறைந்ததாக `தமிழ்நாடு நம்பர் ஒன்’ என்று சிங்கநடை போடுவதாக அமைய வேண்டும்” என்றார் மு.க.ஸ்டாலின்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *