காங்கிரஸ் கட்சியிலிருந்து அழைப்பு… நாளைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யணும் உடனடியா நீங்க சென்னைக்கு கிளம்பி வரணும்,
சுற்றியிருந்த நண்பர்களே ஐதராபாத்திலிருந்து ஃப்ளைட் டிக்கெட் போட, செலவுக்கு எவ்வளவு பணம் ஏதும் வேண்டுமா எனக் கேட்க, இல்ல என் அக்கவுண்ட்ல 2000 இருக்கு போதும் பாத்துக்கலாம் என சென்னைக் கிளம்பி வந்து சேர்ந்திருக்கிறார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ராஜ்ய சபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்டோபர் திலக். இன்று ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன் என பலர் ராஜ்யசபா சீட்டைப் பிடிக்கும் முயற்சியில் களமிறங்க, காங்கிரஸ் தலைமையின் சாய்ஸாக கிறிஸ்டோபர் திலக்கே இருந்திருக்கிறார்.
காங்கிரஸ் தலைமை, கட்சியில் இருக்கும் யாராவது ஒருவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கினால், மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். அதிருப்தியை ஏதொவொரு வகையில் வெளிப்படுத்துவார்கள். ஆனால், கிறிஸ்டோபர் திலக் என்கிற பெயர் அறிவிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டுக்கு வேண்டுமானால் அவரின் பெயர் புதிதாக இருந்திருக்கலாம்.
ஆனால், கேரளா, ஆந்திரா, வட கிழக்கு மாநிலங்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாராட்டு மழையைப் பொழிகிறார்கள் காங்கிரஸ்காரர்கள். யார் இவர் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரிக்கும்போது, ஆச்சர்யப்படுத்தும் பல தகவல்களை அள்ளித் தருகிறார்கள்.