சிவகங்கை: ‘கரூர் சென்றால் உயிருக்கு ஆபத்து இருப்பதால், விஜய் அங்கு செல்வதை தவிர்த்திருக்கலாம்’ என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் பாண்டித்துரை,
முன்னாள் மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, ஓபிசி அணி மாநிலச் செயலாளர் நாகேஸ்வரன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கரூரில் மக்களுக்கே பாதுகாப்பு இல்லை. அங்கு சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அனைவருக்கும் சந்தேகம் உள்ளது. அதனால் கரூர் செல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறியிருக்கலாம்.
மக்கள் விரோத அரசு: திமுக அரசு மக்களுக்கு விரோதமாக இருப்பதால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். திமுக ஆட்சியில் கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 65 பேர் என தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. காவல் நிலையங்களில் பெட்ரோல் குண்டு வீசுகின்றனர். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எங்கே இருக்கிறது? இவ்வாறு அவர் கூறினார்.