மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று திமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, ‘அதிக தொகுதிகளில் நிற்க வேண்டும் என்கிற எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்’ என பெ.சண்முகம் பேசியிருந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருவருக்கும் ஒரே எண்ணிக்கையிலான தொகுதியை ஒதுக்கும் முடிவிலேயே திமுக இருந்தது. இதனால் இரு கட்சியினரும் ஒரே நாளில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிபிஐ இன்று காலை திமுகவுடன் 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சி.பி.எம் க்கும் 5 தொகுதிகளை மட்டுமே கொடுக்க திமுக முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து சி.பி.எம் இன் மாநில நிர்வாகக் குழு இன்று கூடியது. அந்தக் கூட்டத்தில் அதிக தொகுதிகளை கேட்டுப் பெறும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க சி.பி.எம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
அதன்படி, ‘6 சீட்டுக்கு மேல் என்றால் அறிவாலயத்துக்கு பேச வருகிறோம். இல்லையென்றால் எங்களை அழைக்காதீர்கள்.’ என கறாராக ஒரு செய்தியை சி.பி.எம் திமுக தரப்பு கூறிவிட்டதாகவும் தோழர்கள் வட்டத்தில் கிசுகிசுக்கின்றனர்.
அதிக தொகுதிகளை கொடுக்க மனமில்லாத திமுக, விட்டுப்பிடிக்கும் மைண்ட் செட்டுக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.