உத்திரபிரதேசம் மதுராவில் உள்ள டெல்லி – ஆக்ரா விரைவுச்சாலையில் இன்று அதிகாலையில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த பல பேருந்துகள் தீப்பற்றி எரிந்துள்ளன.
இந்த விபத்தை பார்த்த ஒருவர், “இந்த விபத்தில் கிட்டத்தட்ட 3 – 4 பேருந்துகள் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்து நடந்த போது நான் தூங்கி கொண்டிருந்தேன்.
நான் பயணித்துகொண்டிருந்த பேருந்தின் சீட்டுகள் ஃபுல் ஆக இருந்தன. இந்த விபத்து அதிகாலை 4 மணி அளவில் நடந்தது” என்று பேசியுள்ளார்.

காவல் கண்காணிப்பார் பேச்சு
இந்த விபத்து குறித்து அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் சந்திர ராவத், “இந்த சாலையில் முதலில் மூன்று கார்கள் மோதிக்கொண்டுள்ளன. பின், அடுத்தடுத்து ஏழு பேருந்துகள் மோதிக்கொண்டுள்ளன.
இதில் ஒரு பேருந்து லோக்கல் பேருந்து. மற்ற ஆறு பேருந்துகளும் ஸ்லீப்பர் பேருந்துகள் ஆகும்.
இப்போது தீ அணைக்கப்பட்டுவிட்டன. இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் மீட்புப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன” என்று கூறியுள்ளார்.
காரணம் என்ன?
விபத்து நடந்த பகுதியில் நிலவிய பனியால், கார், பேருந்துகளின் ஓட்டுநர்கள் எதிரில் வருபவை, முன், பின் வருபவைகளை பார்க்க முடியவில்லை. அது தான் இந்த விபத்திற்கான காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.