சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் கொடுத்திருந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், 20 ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை கொடுத்திருந்தது.
இத்தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட நபர் சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். 2005ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இம்மனு மீதான விசாரணையில் தற்போதுதான் கோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண் 2004ம் ஆண்டு மே 21ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது உள்ளே அத்துமீறி நுழைந்த நபர் அப்பெண்ணின் உடைகளைக் கழற்றிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அப்பெண் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து அப்பெண்ணின் கை, கால்களைக் கட்டிவிட்டு வாயில் துணியை வைத்து அடைத்து தனி அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அப்பெண் விசாரணையில் குறிப்பிட்டு இருந்தார்.

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அப்பெண்ணிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதில், குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது அந்தரங்க உறுப்பை தன் பெண்ணுறுப்பிற்கு மேல் வைத்திருந்ததாகவும், ஊடுருவவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் அப்பெண் கொடுத்திருந்த வாக்குமூலத்தில், குற்றவாளி தனது அந்தரங்க உறுப்பை எனது அந்தரங்க உறுப்பில் நுழைத்தார் என்று குறிப்பிட்டு இருந்தார். பெண்ணின் இந்த முரண்பட்ட வாக்குமூலத்தை நீதிபதி தனது கவனத்தில் எடுத்துக்கொண்டார்.
இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், “‘375வது சட்டப்பிரிவின் படி, ஊடுருவல் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்பிற்கு மேல் குற்றவாளி தனது அந்தரங்க உறுப்பை வைத்திருந்தது மற்றும் ஊடுருவல் இல்லாமல் விந்தை வெளியேற்றியது பாலியல் வன்கொடுமையாகாது.
அதனை பாலியல் வன்கொடுமை முயற்சி என்று சொல்லலாம். பாலியல் குற்றத்திற்கு ஊடுருவல்தான் முக்கியம். விந்து வெளியேற்றுவது முக்கியமில்லை. வழக்கறிஞரின் சாட்சியங்களைச் சரியான கண்ணோட்டத்தில் பரிசீலிக்கும்போது, உண்மையான கற்பழிப்பு நடக்கவில்லை என்பது தெளிவாகிறது.