சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
வனவிலங்குகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வனத்தை ஒட்டிய தனியார் தேயிலைத் தோட்டங்களில் புலி, சிறுத்தை போன்ற உயிரினங்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன.

இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள மஞ்சக்கொம்பை பகுதியில் சிறுத்தை ஒன்று அசைவற்றுக் கிடப்பதாக வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் நேற்று காலை தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதிக்கு வனத்துறையினர் குழுவாகச் சென்று ஆய்வு மேற்கொண்டதில் இரண்டு சிறுத்தைகள் அந்தப் பகுதியில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் இரண்டு சிறுத்தைகளின் உடல்களையும் கூறாய்வு செய்து அதே இடத்தில் வைத்து தீயிட்டு எரித்துள்ளனர்.