துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்களான பேராவூரணி அசோக்குமார், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, ஒரத்தநாடு வைத்திலிங்கம், தஞ்சாவூர் சண்.இராமநாதன் ஆகியோருக்கு வாக்கு கேட்டு தொகுதி வாரியாகப் பிரசாரம் செய்தார்.
இதில் உதயநிதி பேசியதாவது, “தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போய், அங்கு இருக்கக்கூடிய மக்கள், கட்சியினரைச் சந்திச்சு நம்முடைய உதயசூரியன் சின்னத்திற்கும், நம்முடைய கூட்டணிச் சின்னத்திற்கும் வாக்கு கேட்டு வர்றேன். எத்தனையோ மாவட்டத்துக்குப் போயிருந்தாலும், இந்தத் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருவது எப்பவும் ஸ்பெஷல்தான்.

தஞ்சாவூர் மாவட்டம் எப்பவும் திமுக-வின் கோட்டை. இந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்தான் கலைஞர் கருணாநிதியைக் கொடுத்த மாவட்டம். அவருடைய காலடி படாத இடமே கிடையாதுன்னு சொல்ற அளவுக்கு இங்கு வாழ்ந்தவர்.
1962இல் தேர்தலில் கருணாநிதி தஞ்சை மண்ணிலிருந்துதான் வெற்றி பெற்றார். கலைஞர், தலைவரைப் போல் அதே பெருமையோடு, நானும் ஒரு டெல்டாகாரன் என்கிற உரிமையோடு உங்களையெல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன்.
இந்த எழுச்சியைப் பார்க்கும்போது, நிச்சயமா இந்த முறை எட்டுக்கு எட்டு தொகுதியும் ஜெயிக்கப் போறது உறுதி. அசோக்குமாரை நீங்க சட்டமன்றத்துக்கு அனுப்பணும். செய்வீங்களா? கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 23,000 வாக்கு வித்தியாசத்துல அசோக்குமாரை வெற்றி பெற வச்சீங்க அதற்கு நன்றி.
இந்த முறை குறைந்தது 50,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கணும். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஒரத்தநாட்டில் போட்டியிடுகிறார். அவரைப் பற்றி நான் உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. உங்க அத்தனை பேருக்கும் அறிமுகமானவர் வைத்திலிங்கம். ஒரத்தநாட்டுக்கு மட்டும் இல்ல, ஒட்டுமொத்த தஞ்சாவூர் மாவட்டத்தோட வளர்ச்சிக்கும் நிறைய பணியாற்றி இருக்கிறார். எந்தச் சந்தர்ப்பத்திலும், எந்தச் சமயத்திலும் ஒரத்தநாட்டை விட்டுக்கொடுக்காதவர்.

எதையும் மனசுல வச்சுக்க மாட்டார், வெளிப்படையா பேசக்கூடியவர், எதார்த்தமானவர். அவர் எதிர்க்கட்சியா இருந்தப்பவும் சட்டமன்ற உறுப்பினரா தொகுதிக்கு அத்தனை திட்டங்களைக் கேட்டு வாங்கி இருக்கிறார். இதுதான் அவருடைய அழகு, இதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசாங்கத்தின் அழகு.
அவர் தொகுதியில் பல சாதனைகளைச் செய்துள்ளார். வைத்திலிங்கம், என்னிடத்தில், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்ததும் சில கோரிக்கைகளை நிறைவேத்தணும்னு உரிமையோடு சொல்லியிருக்கார்.
உங்க எல்லாருக்குமே அறிமுகமானவர், என்னுடைய சகோதரர் சண்.இராமநாதன். அவருடைய சிறப்பான செயல்பாட்டைப் பார்த்து, பணிகளைப் பார்த்து நம்முடைய தலைவர் மேயராகப் பணியாற்றுகின்ற அந்தப் பொறுப்பைக் கொடுத்தார். சண்.இராமநாதன் தனது நிர்வாகத் திறமையால் தமிழ்நாடு அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் இடமும், இந்திய அளவில 13-வது இடமும் தஞ்சை மாநகராட்சிக்குப் பெற்றுக் கொடுத்தார்.
இன்று சண்.இராமநாதனை வெற்றி வேட்பாளராக உங்ககிட்ட ஒப்படைச்சிருக்கார் தலைவர். நானே ஒரு வேட்பாளர், சென்னையில சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில நான் நிக்கிறேன். என் தொகுதிக்கு நான் ஒரே ஒரு நாள்தான் பிரசாரத்துக்குப் போனேன். ஏன் என் தொகுதியை விட்டுட்டு தஞ்சாவூருக்கு வந்திருக்கேன்னா, எனக்கு என் வெற்றியை விட, சண்.இராமநாதனுடைய வெற்றி மிக மிக முக்கியம்.

அவரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கணும். போன முறை நீலமேகத்தை 47,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வச்சீங்க. இந்த முறை கொஞ்சம் எக்ஸ்ட்ரா. நீங்க ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வச்சா நான் மாதம் ஒரு முறை தஞ்சாவூருக்கு வந்து உங்கள் எல்லாரையும் பார்க்கிறேன். எதிர்த்துப் போட்டியிடுற பாஜக-வா? அப்ப ஒரு லட்சம்தான்!
எதிர்த்துப் போட்டியிடுற பாஜக வேட்பாளருக்கு டெபாசிட் காலி என்கிற செய்தி வரணும். திராவிட மாடல் 2.0 அரசு அமைஞ்ச உடனே ஒவ்வொன்றையும் பெற்றுத் தருவதற்கு உங்களிடத்தில் உறுதிமொழி கொடுக்கிறேன்” என்றார்.