அப்போது அவர்களிடம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் லட்சிய ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை அது உங்களுக்கு உதவியாகத்தான் இருக்கும் என்றும் அமித் ஷா உறுதியளித்திருப்பதாகக் கூறியிருக்கிறார் மன்சுக் மாண்டவியா. அதை ஏற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, கூட்டணியை இறுதி செய்திருக்கிறார்.
அதன்பிறகு பா.ஜ.க நிர்வாகிகளுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, “எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த தேர்தலிலும் அதே கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறோம். இந்தக் கூட்டணியில் அ.தி.மு.க இருக்கிறது.

அத்துடன் புதிதாக ஒரு கட்சியும் இணைந்திருக்கிறது. அந்தக் கட்சி நம்முடன் இணைந்தால் கூட்டணி பலமாக இருக்கும் என்றும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் கூறியதன் அடிப்படையில், அந்தக் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம்” என்றார்.
அவரையடுத்துப் பேசிய பா.ஜ.க-வின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மான்சுக் மாண்டவியா, “என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எங்களுக்கான 14 இடங்களில் பா.ஜ.க 10 தொகுதிகளிலும், அ.தி.மு.க மற்றும் ல.ஜ.க தலா இரண்டு தொகுதிகளில் போட்டியிடும்” என்றும் தெரிவித்தார்.