தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் குறித்தும், தி.மு.க அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுப்பது குறித்தும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் உரையாற்றி தீர்மானத்தை வாசித்தார். அவரின் உரையில், “கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்களின் பாதம் பணிந்து வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.
தமிழ்நாட்டு மக்களுடைய நல்லாட்சியோடு நான்கரை ஆண்டு காலம் எதிர்ப்புகளுக்கும், துரோகங்களுக்கும் மத்தியிலே பொற்கால ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி. இன்றைக்கு தமிழகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்ற சர்வாதிகாரத்தை எதிர்த்து “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்கிற பயணத்தை தொடங்கி, இதுவரை 175 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு கோடி மக்களை நேரிலே சந்தித்தவர்.