இந்த வரி அனைவருக்குமே புரியுமா, இயக்குநர் இதனை ஏற்றுக் கொள்வாரா என யோசனைகளும் எனக்குள் அப்போது ஓடியது. ஆனால், கே.வி. ஆனந்த் சாருமே ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட் என்பதனால், ‘குவியம் என்றால் ஃபோகஸ்தானே’ என டக்கென சொன்னார். இதன் பிறகு ஹாரிஸ் சாருக்கு இந்த வரி புரியுமா என்கிற யோசனை தொற்றிக் கொண்டது. ஆனால், ஹாரிஸ் சாருக்கு இந்த வரி ரொம்ப பிடித்துவிட்டது. ‘எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால், பாடலுக்கு இது சவுண்டாக நன்றாக இருக்கும்’ என்றார்.

அவர் எப்போதுமே வார்த்தைகளின் சவுண்டை கவனித்து பாராட்டுவார். பிறகு ‘அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்’ என்பது போன்ற வரிகளை ஜர்னலிசன் களத்தை சுற்றியே எழுதினேன். இதைக் கேட்கும்போது, ப்ரஸ்ஸுக்குள் நடக்கும் காதல் கதை நினைவிற்கு வரவேண்டும். அது இந்தப் படத்தையும் நினைவூட்ட வேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்தப் பாடலை முழுமையாக எழுதினேன்.” என்றார்.