சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன். திமுக கூட்டணியிலிருந்து விசிக-விற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்திருந்தது.
கடந்த சில நாட்களாக, இப்படியான முடிவை எடுத்ததற்காக திருமாவளவனுக்கு கூட்டணி தலைமையிலிருந்து பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக பேசப்பட்டன.
அப்படியான பேச்சுகள் மேலோங்கி இருக்கும் நேரத்தில் சட்டமன்ற தேர்தல் போட்டியிலிருந்து பின் வாங்குவதாக இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார் திருமா.
அதில் அவர், “2026-க்குப் பிறகு அரசியல் சூழல் மாறும். அதனால் நான் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
ஆனால், திருமாவளவன் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என வதந்திகளை கிளப்பிவிட்டனர். கூட்டணியே பாதிக்கப்படும் அளவிற்கு கருத்து பரப்பப்படும் சூழலில் அதனை கவனிக்க வேண்டியிருக்கிறது. எந்தவொரு யுத்தகளத்தில் முன்நோக்கி போவது போல பின்நோக்கி வருவதும் முக்கியமானது.

பதவிக்காக நான் போட்டியிடவில்லை. தொங்கு சட்டமன்றம் வரும், அதனால் நான் போட்டியிடுகிறேன் என பேசுகிறார்கள். என்னுடைய நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன். உத்தியை மாற்றி வைக்கிறேன்.
எனவே, நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மறைந்த தலைவர் இளையபெருமாளின் இளைய மகன் ஜோதிமணி வேட்பாளராக போட்டியிடுவார்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
