உத்தரப்பிரதேசத்தில் கோர்ட்டால் விவாகரத்து வழங்கப்பட்ட மகளை ஆரவாரத்துடன் மேளதாளங்களுடன் தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் ஞானேந்திர சர்மா. ஓய்வுபெற்ற நீதிபதியான இவருக்கு பிரனிதா என்ற ஒரே ஒரு மகள் இருக்கிறார். இவர் 2018ம் ஆண்டு ராணுவ அதிகாரி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டில் பிரனிதா கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நடந்த இந்தச் சித்ரவதை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.
இத்தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். அப்படி இருந்தும் அவர்களது உறவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து பிரனிதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதற்காக மீரட் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் பிரனிதாவிற்கு விவாகரத்து வழங்கியது. விவாகரத்து வழங்கியவுடன் பிரனிதா கோர்ட்டில் இருந்து வெளியில் வந்தவுடன் அவருக்கு மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க தனது மகளை ஞானேந்திர சர்மா தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இதில் உறவினர்களும் திரளாகக் கலந்து கொண்டு நடனமாடியபடி வந்தனர். அவர்கள் எனது மகளை நேசிக்கிறேன் என்று எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய டிசர்ட் அணிந்தபடி அதில் கலந்து கொண்டனர்.