`எப்படி ஜெயிக்குறாங்கனு பார்த்துடுறேன்!’ – தலைநகர் உள்ளடி டு சீட்டுக்கு 2 ஸ்வீட் பாக்ஸ்! | கழுகார் | kazhugar updates on 2026 tn assembly election

Spread the love

ஒவ்வொரு தொகுதியிலும் பிரதானக் கட்சி வேட்பாளர்கள், எதிர்க்கட்சி வேட்பாளரின் பெயர் கொண்ட நபர்களைத் தேர்தலில் சுயேச்சையாகக் களமிறக்குவது வழக்கமான ஒன்று. இம்முறை, சீட் கிடைக்காத விரக்தியில் தனி செல்வாக்கு கொண்ட பலரும் பல்வேறு தொகுதிகளில் சுயேச்சையாக தேர்தலில் இறங்கியிருப்பது பிரதான வேட்பாளர்களைக் கலக்கமடையச் செய்திருக்கிறது.

களத்தில் நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், ‘யார் எங்கே எப்படி வாக்குகளைப் பிரிப்பார்கள், ஒட்டுகள் எப்படி சிதறும்…’ என்றே தெரியாத நிலை நீடிக்கிறது. இந்தச் சூழலில், சுயேச்சை வேட்பாளர்களும் வாக்குகளைப் பிரிப்பதால் இரு கழகங்களையும் சேர்ந்த வேட்பாளர்கள் அரண்டு போயிருக்கிறார்களாம். பல தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்களை அமைதி ஆக்குவதற்கு டீல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தென்மாவட்டம் ஒன்றில், மலர்க் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் ‘புல்லாங்குழல்’ பிரமுகர், சீட் பெறுவதற்காக இரண்டு ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்திருப்பது தற்போது வெளிச்சமாகியிருக்கிறது.

மலர்க்கட்சியின் மேலிடப் பார்வையாளர் ஒருவருக்கு ஸ்வீட் பாக்ஸ்களை படியளந்திருக்கும் அந்த ‘புல்லாங்குழல்’ பிரமுகர், தொகுதிக்குள் ஓட்டுக்கு பசையை வாரி இறைக்கவும் தயாராகிறாராம். கட்சி சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் நிதி பிரித்து தரப்படவுள்ள சூழலில், அந்த ‘புல்லாங்குழல்’ பிரமுகரின் பயோடேட்டாவை எடுத்திருக்கிறது மத்திய உளவுத்துறை.

அதில், அந்த பிரமுகர் மீதிருக்கும் பழைய வழக்கு விவரங்களும் தெரியவரவே, ‘இப்படிப்பட்டவருக்கு ஏன் சீட் அளித்தார்கள்… ஓட்டுக்குப் பசை கொடுத்தாலும் ஜெயிக்க வாய்ப்பில்லை’ என்று ரிப்போர்ட் அளித்துவிட்டார்களாம். அதுதொடர்பான விசாரணையில்தான், மேலிட பார்வையாளரிடம் ஸ்வீட் பாக்ஸ்கள் அளிக்கப்பட்டதெல்லாம் தெரியவந்திருக்கிறது. அவர்மீது டெல்லி மேலிடம் கடும் கோபத்தில் இருக்கிறதாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *