ஆக, தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளைப் பரப்பும் சாதனமாக திரைத்துறையைப் பயன்படுத்தி கருணாநிதி அரசியலில் வென்ற அதே உத்தியை மாற்றிப் பயன்படுத்தி வெற்றிகண்டவர் எம்ஜிஆர்.

திமுக மேடைகளில் தனக்குக் கிடைத்த ஆதரவை மேன்மேலும் மெருகூட்டி அரசியல் வெற்றியாக மாற்ற தன் திரைத்துறை கவர்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டார் எம்ஜிஆர் .
அண்ணா தன் “வேலைக்காரி” படத்தின் மூலம் தொடங்கிய திராவிட திரைப்பட பிரச்சார பாதையை அகலப்படுத்தி முன்னும் பின்னுமாகப் பயன்படுத்திக்கொண்டனர் இந்த “இருவர்” !
தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணமும் திட்டமும் எம்ஜிஆருக்கு முன்னரே இருந்தது என உறுதிப்படுத்தும், அவருக்கு நெருக்கமானவர்களின் வரலாற்று வாக்குமூலம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்திருக்குமானால் கருணாநிதியையும் மிஞ்சிய அரசியல் சாணக்கியர் எம்ஜிஆர் என்ற பெயர் அவருக்குக் கிடைத்திருக்கக்கூடும் !
ஒருவேளைத் தன்னை எதிர்ப்பவர்களை முளையிலே கிள்ளிவிடும் கருணாநிதியின் அரசியல் குணம் அறிந்த, அவரது “நண்பர்” எம்ஜிஆர் தன் திட்டத்தை யாரிடமும் பகிராமல் தனிமனிதனாகவே அரங்கேற்றியிருக்கலாம். அந்த கண்ணோட்டத்திலும் எம்ஜிஆர் வியக்கப்பட வேண்டியவரே ! ஏனென்றால் கருணாநிதியை வென்றவர் என்பதால் அல்லாமல் அவரால் வஞ்சிக்கப்பட்டவர் என முன்னிறுத்தப்பட்ட எம்ஜிஆரின் பொதுவெளி பிம்பம் தான் காலத்தைக் கடந்தும் மின்னிக்கொண்டிருக்கிறது !
தொடரும்…
காரை அக்பர்