திமுக பெருந்தலைகள் ஆரம்ப காலத்தில் மகளிர் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, பின்னர் அதன் வாயிலாகவே மகளிர் வாக்குகளை தக்கவைத்தது போல், அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆரும், அதன் பின்னர் வழிநடத்திய ஜெயலலிதாவும் எப்படி தாய்க்குலங்களின் அன்பையும், ஆசியையும் பெற்றார் என்பதையும் இன்றைய பகுதியில் பார்ப்போம்.
எம்ஜிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்னமே திரைப்படங்கள் வாயிலாக மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார். தாய்க்கு தலைவணங்கும் மகனாக, தங்கைக்காக வாழும் தமையனாக, சமுதாயத் தலைவனாக மக்களை சென்றடைந்திருந்தார். அதனால் அவர் அரசியலுக்கு வந்தபோது மக்களுக்கு ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று பாடி வைத்திருந்தது மெய்ப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.
இந்தி எதிர்ப்புப் போரட்டம் போன்ற மக்களுக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாலும், திமுகவில் ஏற்கெனவே இருந்தவர் என்பதாலும், திரையின் உச்ச நட்சத்திரம் என்பதாலும் அவர் ஆரம்பித்த அதிமுக, மக்களிடம் அதிகப் போராட்டங்கள் இல்லாமலே சென்றடைந்தது.

எம்ஜிஆர் ஒரு மகனாக, ஓர் அண்ணணாக, தலைவனாக தங்களைப் பாதுகாப்பார் என்று தாய்க்குலங்கள் நம்பி வாக்களிக்க ஆரம்பித்தனர்.
மேலும், அந்த காலக்கட்டம் குடும்பத் தலைவர்களும், ஆண்களுமே அந்தக் குடும்பத்தின், வீட்டில் உள்ள பெண்களின் அரசியல் சார்பை தீர்மானிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனாலும் திமுகவில் இருந்து விலகி எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்தபோது அவர் பக்கம் சென்ற கணிசமான தொண்டர்களின் குடும்பப் பெண்களும் எம்ஜிஆர் வாக்கு வங்கியாகினர்.
எம்ஜிஆர் தனது ஆட்சிக் காலத்தில் ரேஷன் அரிசி விநியோகத்தில் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்தது, அதை சார்ந்திருந்த தாய்மார்கள் மத்தியில் அவருக்கான அபிமானம் குறையாமல் வைத்திருந்தது. அதுதவிர ஏழைக் குடும்பப் பெண்களுக்கு இலவச சேலைகள், திருமாங்கல்யத் திட்டம் ஆகியவையும் மதிய உணவுத் திட்ட விரிவாக்கமும், பெண்களின் அன்றாடச் சுமையைக் குறைத்தன.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கணவனை இழந்த கைம்பெண்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், விதவை ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.