சென்னை: உயர் நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி பி.வேல்முருகன் மாற்றப்பட்டு, அந்த பொறுப்பு நீதிபதி என்.சதீஷ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேலும் சில நீதிபதிகளின் இலாகாக்களையும் மாற்றம் செய்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகளின் வழக்கு விசாரணைக்கான இலாகாக்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். நீதிபதிகளின் இலாகாக்கள் வரும் செப்டம்பரில் புதிதாக மாற்றப்படவிருந்த நிலையில், ஆக.11 முதல் முன்கூட்டியே மாற்றியமைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி பி.வேல்முருகன், மேல்முறையீடு மற்றும் சிவில் மறுஆய்வு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரிக்கவுள்ளார்.
குற்றவியல் வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனும், இந்துசமய அறநிலையத்துறை, திரைப்படம், மின்வாரியம் தொடர்பான வழக்குகளை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷும், சிபிஐ தொடர்பான வழக்குகளை நீதிபதி எம்.நிர்மல்குமாரும், குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதி ஜி,கே.இளந்திரையனும் விசாரிக்கவுள்ளனர். இதுமட்டுமினறி, மேலும் பல நீதிபதிகளின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.