மதியத்துக்கு மேல் இன்னொரு க்ரூப் வந்தது. அந்த கோஷ்டி செய்ததுதான் இன்னும் ரகளையாக இருந்தது. சத்யமூர்த்தி பவனில் இருந்த அத்தனை தலைகளும் மதிய சாப்பாட்டுக்காக வெளியே போயிருந்த நேரம், அந்த இடமே மந்தமாக இருந்தது.
யாரும் இல்லாத அந்த நேரத்தில் வந்து, ‘வேண்டும் வேண்டும் மீனவருக்கு சீட் வேண்டும்…’ என கோஷம் எழுப்பினர். கோஷத்திலும் கோக்குமான கோஷமாக இருந்தது. ராகுல் வாழ்க பெருந்தகை வாழ்க கார்கே வாழ்க…என கிரிஷ் சோடங்கர் வரைக்கும் வாழ்க கோஷம் போட்டுவிட்டனர். பின்னர், ‘வஞ்சிக்காதே…வஞ்சிக்காதே மீனவர்களை வஞ்சிக்காதே…’ என இன்னொரு கோஷம். ‘இப்போ யாரை எதிர்த்துதான் சார் நீங்க போராடுறீங்க..’ என நிருபர்களுக்கே தலை கிறுகிறுத்தது. கோஷத்தை ஒரே ஒரு ரவுண்ட் வாசித்துவிட்டு இடத்தை காலி செய்ய நினைத்தனர்.
ஊடகத்தினர்தான்…’சார் ஒரு 5 நிமிசமாச்சு புட்டேஜ் வேணும். இன்னொரு தடவை கோஷம் போடுங்க’ என்றனர். சீட்டு கேட்டு கோஷம் போட வந்தவர்களை புட்டேஜூக்காக கோஷம் போட சொல்ல கொஞ்சம் அலுத்துக் கொண்டே கோஷம் போட்டுக் கொண்டு கலைந்தது அந்த க்ரூப்.
11 பேர் இருந்தால் ஒரு கிரிக்கெட் டீம் ரெடி. 20 பேர் இருந்தால் காங்கிரஸில் ஒரு கோஷ்டி ரெடி. கட்சியை வளர்க்க இத்தனை கோஷ்டிகளும் கொடி பிடித்திருந்தால் எப்போதோ கட்சி வளர்ந்திருக்கும். வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6 வரை நேரமிருந்தாலும், இன்னும் 2 நாட்கள்தான் வேட்பு மனு செய்ய முடியும். ‘பொறுமையே பெருமை…’ என காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமை கண் விழிக்க வேண்டிய நேரமிது.!