'எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் எடப்பாடியை பார்த்து அழுதிருப்பார்' – உதயநிதி

Spread the love

திமுக மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் நடைபெற்றது. இதில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “இன்றைக்கு மேற்கு மண்டலத்துக்குட்பட்ட, 39 தொகுதிகளில் இருந்து, சுமார் 80,000 நிர்வாகிகள் வந்துள்ளீர்கள். உங்கள் எழுச்சியை பார்க்கும்போது, ‘வெஸ்டிலும்.. நாம்தான் பெஸ்ட்.’ என தெரிகிறது. இன்று பல கட்சிகளுக்கு எத்தனை பூத் கமிட்டிகள் இருக்கின்றன என்பதே தெரியாது. இப்பொழுது தான் கணக்கு எடுக்கிறார்கள். நாம் பூத் கமிட்டிகளுக்கு லட்சக்கணக்கான நிர்வாகிகளை நியமித்துள்ளோம். முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இளைஞரணி தான் பயிற்சி களம்.

உதயநிதி

மோடி எப்போதெல்லாம் தொலைக்காட்சியில் பேசுகிறாரோ அப்போதெல்லாம் மக்கள் பயப்படுகிறார்கள். பண மதிப்பிழப்பு உள்ளிட்ட பல அதிர்ச்சி தகவல்களை அறிவித்தார். கல்வி உரிமை, நிதி உரிமை, மொழி உரிமை என தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கிறார்கள். பாஜக-வின் பாசிச சக்திக்கு எதிராக திமுக ஜனநாயக போர் செய்கிறது. தேர்தல் வருகிறது என்பதற்காக மோடியும், அமித் ஷாவும் வருகிறார்கள். அவர்கள் வந்தாலும் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிதி வராது. மோடியின் டாடியே வந்தாலும் பயப்பட மாட்டோம்.

உதயநிதி

ஜாடிக்கேற்ற மூடி என்பது போல, மோடிக்கேற்ற அடிமையாக பழனிசாமி இருக்கிறார். தியேட்டரில் இதயகனி படம் பார்த்து எடப்பாடி பழனிசாமி அழுகிறார். இன்றைக்கு எம்ஜிஆர் இருந்திருந்தால் எடப்பாடியை பார்த்து அழுதிருப்பார். அதிமுக-வை மொத்தமாக பாஜக-விடம் அடகு வைத்துவிட்டார். தேர்தலுக்கு இன்னும் 50 நாள்கள்தான் இருக்கின்றன. அமித் ஷா தமிழ்நாடு வந்து எவ்வளவு பெயின்ட் அடித்தாலும், தேர்தலில் மக்கள் அவர்கள் முகத்தில் கரியை பூசுவார்கள். இது தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்குமான ஜனநாயக போர். எத்தனை பேர் வந்தாலும், களத்தில் வெல்ல போவது திமுகதான். இளைஞரணியினர் இறங்கி வேலை பார்த்தால், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி நிச்சயம். இந்த தேர்தலில் பத்து தோல்வி பழனிசாமியையும், மொத்த தோல்வி மோடியையும் விரட்டியடிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட டார்கெட்டை மனதில் வைத்து இயங்குங்கள்” என்றார்.

உதயநிதி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *