சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் முறைகேடுகளுக்குக் காரணமான திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நாளை (நவ. 17) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில், “சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுக-வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில், 17.11.2025 – திங்கட் கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால், மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு 20.11.2025 – வியாழக் கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.