இந்த நிலையில், தி.மு.க தலைமைக்கு நெருக்கடி கொடுப்பதற்காக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்குத் தூண்டில் போட்டிருக்கிறாராம் எ.வ.வேலு.
`ஆம்பூர் தொகுதி தனது ஆதரவாளருக்குக் கிடைக்க வேண்டுமானால், எப்படியாவது வாணியம்பாடியைக் கூட்டணிக்குத் தள்ளிவிட வேண்டும்’ என்பது தான் எ.வ.வேலுவின் திட்டமாம்.
அதன்படி, மனிதநேய மக்கள் கட்சிக்கும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதால், அந்த கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவை வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட வற்புறுத்தி காய்நகர்த்திக் கொண்டிருக்கிறாராம் எ.வ.வேலு.
2011 சட்டமன்றத் தேர்தலின்போது, ஆம்பூர் தொகுதியில், மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அஸ்லம் பாஷா வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். அதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு தமிழகத்தை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய ஆம்பூர் கலவர வழக்கில், 191 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கலவரத்துக்குத் தலைமை தாங்கியதாக முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷா பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், `இவ்வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ அஸ்லம் பாஷாவின் சொத்துகளை, சேதப்படுத்தப்பட்ட சொத்துகளுக்கு ஈடாக பறிமுதல் செய்யவும் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம், 2020-ம் ஆண்டிலேயே அஸ்லம் பாஷாவும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.

ஆம்பூர் கலவரத்துக்குப் பிறகு நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, மீண்டும் அந்தத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. ஆம்பூர் மக்களின் கோபத்துக்கு ஆளானதால், அந்தக் கட்சி தோல்வியடைந்தது. இதனால், 2021 தேர்தலின்போது, தி.மு.க கூட்டணியில் ஆம்பூர் தொகுதியை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு பெறவில்லை. பாபநாசம், மணப்பாறை ஆகிய இருத் தொகுதிகளிலும் போட்டியிட்டு மனிதநேய மக்கள் கட்சி வெற்றிபெற்றது. ஜவாஹிருல்லா, பாபநாசம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.
இந்தச் சூழலில்தான் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரிடம் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறாராம் எ.வ.வேலு. `ஆம்பூர் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு பக்கத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியிலும் எதிரொலிக்கிறது. அப்படியிருக்கும்போது, இந்த இருத் தொகுதிகளிலுமே எங்களுக்குப் போட்டியிட விருப்பமில்லை’ என பிடிகொடுக்காமல் கைவிரித்துவிட்டாராம் ஜவாஹிருல்லா.
இதனால், `வாணியம்பாடியை எப்படி கழற்றிவிடுவது?’ எனத் தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறாராம் எ.வ.வேலு. `அமைச்சரின் இந்த குழப்படியான உள்ளடி வேலைகளால், வாணியம்பாடி தொகுதி மீண்டும் `இலை’மறைவாக அ.தி.மு.க-வுக்கே சாதமாகிவிடும்’’ என்று கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.