எஸ்.ஐ.ஆர்க்கு பின்பு 18,92,058 வாக்காளர்கள் வரைவுபட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் மற்றும் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் அடக்கம் என சொல்லப்பட்டுகிறது. இது குறித்து அரசியல் கட்சிகளை சேர்ந்த சிலரிடம் பேசினோம், “தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலில் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் பெற்று அதை பதிவேற்றம் செய்கின்ற பணி சுணக்கமாக நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சியர், டி.ஆர்.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் இதில் முழு கவனம் செலுத்தி இரவு, பகலாக பணியினை மேற்கொண்டனர்.
அதனால் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பம் பெற்று பதிவேற்றம் செய்யும் பணி வேகமெடுத்தது. ஆதார் போன்றவை கொடுக்காத விண்ணப்பங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகுதியான வாக்காளர் பெயர் ஏதோ ஒரு காரணத்தால் விடுபட்டிருந்தால், அல்லது நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அந்த வாக்காளரை சேர்த்து அவர் தன்னுடைய வாக்குரிமையை செலுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாக்காளர் தனது வாக்கை இழந்தால் அது தேர்தல் ஆணையத்தில் தோல்வியாகவே பார்க்கப்படும்” என்றனர்.