ஓபிஎஸ் அணியிலிருந்த மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன், ‘எம்.ஜி.ஆர் அண்ணா திமுக’ என்ற கட்சியை சமீபத்தில் தொடங்கியுள்ளது, பேசு பொருளாகியுள்ளது.

இது ஒன்றும் புதிதல்ல, திமுக-விலிருந்து பிரிந்து சென்றுதான் அதிமுக-வை எம்.ஜி.ஆர் தொடங்கினார். என்றாலும், அந்த அதிமுக-வில் பயணித்தவர்கள்தான் வெளியேறி அதிகமான அளவில் புதுக்கட்சி தொடங்கியுள்ளார்கள் என்பதுதான், தமிழக அரசியலில் சுவாரஸ்யமான வரலாறு.
எம்.ஜி.ஆர் இருக்கும்போதே ‘நமது கழகம்’ என்ற கட்சியை அவர் அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அது கட்சியினரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது வேறு விஷயம். பின்னாளில் அவர் ஜெயலலிதாவின் பிரசார வாகனத்தில் தொங்கிக்கொண்டு சென்றதுதான் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதுபோல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை இணைத்துக்கொண்டு அவ்வப்போது கட்சிகளை தொடங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
அப்படி தனிக்கட்சி தொடங்கியவர்களில் திருநாவுக்கரசரைத் தவிர வேறு யாரும் பெரிய அளவில் பேசப்படவில்லை. பலர் ஆரம்பித்த கட்சிகளையும் காணோம், அவர்களையும் காணோம்.
அப்படி தொடங்கப்பட்ட சில கட்சிகளைப் பற்றி பார்ப்போம்
1989 : ‘எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை கே.பாக்கியராஜ் தொடங்கினார், ஆனால் நடத்த முடியவில்லை.
1990 : ‘எம்.ஜி.ஆர் அதிமுக’ என்ற கட்சியைத் திருநாவுக்கரசர் தொடங்கினார். அக்கட்சி மூலம் சில தேர்தல்களில் வெற்றி பெற்றவர், பா.ஜ.க-வில் இணையும் வரை கட்சியை நடத்தினார்.

1995 : ‘எம்.ஜி.ஆர் கழகம்’ என்ற கட்சியைத் ஆர்.எம். வீரப்பன் தொடங்கினார். தொடர்ந்து திமுக-வுக்கு ஆதரவு அளித்து வந்தார்.
2001 : அதிமுக முன்னாள் எம்.பி ஏ.சி.சண்முகம் சாதி அமைப்பை முதலில் தொடங்கி, பின்பு புதிய நீதிக் கட்சியைத் தொடங்கினார்.
2010 : ஜெயலலிதா இருக்கும்போதே ‘ஜனநாயக அதிமுக’ என்ற கட்சியை நெல்லையைச் சேர்ந்த செல்வம் என்பவர் தொடங்கி, அதிமுக-வினரின் கவனிப்பால் பின்பு அமைதியானார்.
2017 : ஜெயலலிதா மறைவுக்குப் பின் ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை ஜெயலாலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

2017 : தீபாவின் பரபரப்பு அடங்குவதற்கள் `எம்.ஜி.ஆர் – ஜெ.ஜெ திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை தீபாவின் கணவர் மாதவன் தொடங்கி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
2018 : ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை டிடிவி தினகரன் மேலூரில் தொடங்கி, இன்றுவரை நடத்தி வருகிறார்.

2018 : ‘அண்ணா எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை டிடிவி பாஸ்கரன் தொடங்கினார், அதன் பின்பு சத்தத்தையே காணோம்.
2018 : ‘அண்ணா திராவிடர் கழகம்’ என்ற கட்சியை சசிகலா சகோதரர் திவாகரன் தொடங்கினார், அதன் பின்பு என்ன ஆனது என்று தெரியவில்லை.

2019 : ‘அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை அதிமுக நிர்வாகியான மதுரை வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தொடங்கி நடத்தி திமுக-வுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
2020 : ‘அகில இந்திய புரட்சித் தலைவர் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை மதுரையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தொடங்கி நடத்தி வருகிறார்.

2025 : ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்’ என்ற அமைப்பை ஓ.பி.எஸ் தொடங்கினார். உரிமை மீட்புக் குழுவை கழகமாக மாற்றி கூட்டங்களை நடத்தி வந்தாலும், அரசியல் கட்சியாக பதிவு செய்யவில்லை.
இதில் இன்னொரு வேடிக்கையாக 2022-ல் ‘புரட்சித்தாய் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை சசிகலாவை மனதில் வைத்து பெரம்பலூரைச் சேர்ந்த சேரசோழ பாண்டியன் என்பவர் தொடங்கிய சம்பவமும் நடந்தது.
இடைப்பட்ட காலத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரில் புதிதாக கட்சி ஏதும் தொடங்கப்பட்டதா என்ற தகவல் இல்லை,
இந்நிலையில்தான் அண்ணா காலத்து அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன், தன் தள்ளாத வயதில் தற்போது `எம்.ஜி.ஆர் அண்ணா திமுக’ என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். 1971-ல் கருணாநிதி ஆட்சியிலும், அதன் பின்பு எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தது மட்டுமன்றி எம்.ஜி.ஆருக்கு ஆலோசகர் போலவும் செயல்பட்டார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்து, பின்பு அவரிடம் முரண்பட்டு நெடுஞ்செழியனுடன் சேர்ந்து நால்வர் அணியாக செயல்பட்டு பின்பு பா.ம.க-வில் இணைந்து அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏ என்ற பெருமையை பெற்றவர்.

அதன் பின்பும் தனிக்கட்சி ஒன்றைத் தொடங்கி, அது வேலைக்கு ஆகாமல் போகவே, தேமுதிக-வில் பயணித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பொறுப்பு வகித்து, அங்கிருந்து முரண்பட்டு மீண்டும் அதிமுக-வுக்கு வந்தவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார். பின்பு 2022-ல் ஓ.பி.எஸ் அணியில் திடீரென தோன்றினாலும் அதன் பின்பும் அமைதியாக இருந்தவர், தற்போது ‘எம்.ஜி.ஆர் அண்ணா திமுக’ என்ற கட்சியைத் தொடங்கி கவனிக்க வைத்துள்ளார்.
அடுத்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா தொடங்கும் புதுக்கட்சியை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.